2025 மே 05, திங்கட்கிழமை

‘ஆதரவு வழங்குங்கள்’ ஸ்டாலினிடம் வேண்டுகோள்

Princiya Dixci   / 2021 மே 09 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

ஈழத்தமிழர் நல்வாழ்வுக்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள் என தமிழகத்தின் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக தாய்த் தமிழக தொப்புள்கொடி உறவுகளுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டு மற்றும் கலாசார ரீதியான இறுக்கமான உறவே, தமிழ்த் தேசியத்தின் உறுதியான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையுமெனவும் அவ்வியக்கம் குறிப்பிட்டுள்ளது. 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தாங்கள் பதவி ஏற்றதும் தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘ஈழத் தமிழர் நல்வாழ்வு’ எனும் தலைப்பின் கீழ் முன்மொழியப்பட்ட, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தல் வேண்டும்.

“இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்துக்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல் வேண்டும்.

“இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தல் வேண்டும். 

“மேற்கூடிய 3 அம்சங்களுடன் ஈழத்தமிழர் தொடர்பான ஏனைய வாக்குறுதிகளிலும் அமைத்திருக்கும் புதிய அரசு விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X