2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’தமிழர்களுக்காக முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துள்ளனர்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.சபேசன்

தந்தை செல்வாவின் காலத்திலிருந்து தமிழ் மக்களுடன் பல போராட்டங்களில் பங்களிப்புச் செய்துவந்த முஸ்லிம்கள், தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமைக்காகவும் ஜனநாயக ரீதியிலும் ஆயுதப் போராட்டத்திலும்  அர்ப்பணிப்புச் செய்துள்ளனர் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமின் 50 வருடகால ஊடகப்பணியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 'பொன்விழாக் காணும் சலீம்' எனும் தலைப்பில்,  நிந்தவூர் பிரதேச சபையில் ஞாயிற்றுக்கிழமை (9) இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தமிழை மறந்து போன கொழும்புத் தமிழர்கள் இருந்த காலத்திலும் சிங்கள தேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், தங்களது வீட்டு மொழியாக தமிழ்மொழியை வளர்ப்பதில் பாரிய பங்களிப்புச் செய்துள்ளனர்.

'தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது, அது முஸ்லிம்களுக்கும் சொந்தமாக அமையும். தமிழர்களின் உரிமைக்காக மட்டும் நாம்; குரல் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் உரிமைக்காகவும் எமது போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன' என்றார்.

'பூரணமாக அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று அனைவராலும் முன்வைக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசியலமைப்பு மாற்றத்துக்கான நகர்வை முன்னெடுக்கும்போது அது முக்கிய பிரச்சினையாக மாறுகின்றது.

'அதிகாரத்தைப் பூரணமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மாகாணசபைகளின் முதலமைச்சர்கள்; நாடாளுமன்ற வழிகாட்டல் குழுவினரிடமும் எங்களிடமும் தெரிவித்துள்ளார்கள்.

'மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவது, சட்டமும் ஒழுங்கும், காணி, நிதி அதிகாரங்கள் முழுமையாக வடக்கு, கிழக்குக்கும் பகிரப்படும்போது கேள்வி எழுகின்றது. வடக்கும், கிழக்கும் இணைந்த ஓர் அலகிலா அல்லது அந்த அவையிலா என்று கேள்வி எழுகின்றது.  

'இவ்வாறான சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுவதை  நாம் வரவேற்கின்றோம்.

'முஸ்லிம்களுக்கும் இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உள்ளன என்று பல தடவைகள் நாம்; தெரிவித்துவரும் போதிலும், அவர்கள் அதனை உச்சரிப்பதற்கு தவறி வருகின்றார்கள்' என்றார்.
'புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இனங்களுக்கு இடையிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயற்படும்போது, அவற்றுக்கும் தடை ஏற்படுகின்றது.

'தற்போது தமிழர்கள் பலம் இழந்துள்ளார்கள் என்று யாரும் எண்ணக்கூடாது. எமது மக்களுடைய பலம,; ஜனநாயகப் பலம், சர்வதேச ரீதியான தீர்மானங்களும், அழுத்தங்களும் எங்களுக்கு மிக்க பலமாக அமைந்துள்ளது. அப்பலத்தின் ஊடாகவே   ஆட்சியை  மாற்றி அமைத்துக் காட்டினோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X