2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விவசாய காணிகளை விடுவித்து தருமாறு கோரிக்கை!

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் பிடித்து வைத்திருக்கின்ற 14, 700 ஏக்கர் விவசாய காணிகளையும் அரசாங்கம் உடன் விடுவித்து தர வேண்டும் என்று மனித எழுச்சி நிறுவனத்தின் பணிப்பாளரும், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் அமைப்பாளருமான நிஹால் அஹமட் தெரிவித்தார்.

சம்மாந்துறையில், அப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டு உள்ள விவசாய குடும்பங்களுக்கு விழிப்பூட்டல், அறிவூட்டல், வழிகாட்டல் ஆகியவற்றை மேற்கொள்கின்ற வகையில், மனித எழுச்சி நிறுவனம், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி ஆகியவற்றால் நேற்று முன் தினம்  திங்கட்கிழமை மாலை கூட்டம் நடத்தப்பட்டது. 

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நிஹால் அஹமட்டை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு,

அடுத்த மாதங்களில் பாரிய பட்டினி ஏற்பட்டு விடும் என்று அரசாங்கமே கூறுகின்றது. என்றும் இல்லாதவாறு உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்று நியாயமான அச்சத்தை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள்.

இதனால் விவசாய செய்கையில் மிக அதிக அளவில் ஈடுபடுங்கள் என்று ஜனாதிபதி,  பிரதமர், விவசாய அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் அனைவருமே பொதுமக்களை மீண்டும் மீண்டும் கோரிய வண்ணம் உள்ளார்கள்.

விவசாயிகள் மீது கை வைத்த காரணத்தாலேயே நாடு இன்று இவ்வளவு பாரிய நெருக்கடிக்குள் சிக்கி தவிக்க நேர்ந்து உள்ளது. வயிறுகள் காய்ந்த காரணத்தால் தான் வெடித்த போராட்டங்கள் அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்திருக்கின்றன.

அம்பாறை மாவட்ட விவசாயிகள் மீது அரசாங்கம் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கை வைத்திருக்கின்றது. உள்நாட்டு மோதல் காலம் தொட்டு மூவின மக்களினதும் காணிகள் அரசாங்கத்தால் நுட்பமான முறைகளில் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன. 

4657 குடும்பங்களின் 14700 ஏக்கர் விவசாய காணிகள் இவ்விதம் பிடிக்கப்பட்டு உள்ளன. பாணமை முதல் மல்வத்தை வரை இராணுவம், சீனி தொழிற்சாலை, ஓட்டு தொழிற்சாலை,  வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் போன்ற அரசாங்க கட்டமைப்புகளால்  விவசாய காணிகள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன.

மனித எழுச்சி நிறுவனம், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி ஆகிய எமது அமைப்புகள் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு உரிய நீதியை பெற்று கொடுக்க நீண்ட காலமாக இதய சுத்தியுடன் பல விதமான பகீரத முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வந்திருக்கின்றோம். அவை நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் உள்ளன.

கோத்தா கோ கம உள்ளிட்ட அண்மைய போராட்டங்கள் வெற்றி கண்டு வருகின்ற நிலையில் எமது விவசாயிகளின் நீண்ட கால போராட்டங்கள் ஏன் வெற்றி பெற முடியாது? அதற்கான தருணம் தற்போது கனிந்து இருக்கின்றது.

விவசாயத்தில் ஈடுபடுங்கள் என்று கோரி கொண்டிருக்கின்ற அரசாங்கத்திடம் எமது விவசாய காணிகளை திரும்ப தாருங்கள் என்று கேட்டு பெற கூடிய வியூகத்தை நாம் முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

விவசாய நிலங்களை அரசாங்கம் விவசாயிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவதன் மூலம் விவாயிகளுக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் கூட நிச்சயம் வெற்றி கிடைக்கும்
என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .