2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான பெயர் படிகத்தை இடித்து நொறுக்கிய குற்றச்சாட்டுத் தொடர்பில்; டெலோ அமைப்பின் உப தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஐ.பயாஸ் ரஸாக் முன்னிலையில் இது  தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (16) முன்னெடுக்கப்பட்டது.  

இதன்போது, பிரதிவாதியான ஹென்றி மகேந்திரன்; சார்பான சட்டத்தரணி என்.சிறிகாந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மருத்துவத் தேவைக்காக அவர் இந்தியா சென்றிருப்பதால், போதிய கால அவகாசம் வழங்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.எச்.எம்.மனார்தீன் கோரியதை அடுத்து, இந்த வழக்கை நீதவான் ஒத்திவைத்தார்.

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் ஐக்கிய சதுக்கச் சந்தியிலிருந்து பொதுச் சந்தைவரையான பாதைக்கு கல்முனை மாநகர சபையால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, 2015.08.09 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோர் நெடுஞ்சாலையைத்; திறந்து வைப்பதற்காக மாநகர சபையால் பெயர் படிகமும் நிறுவப்பட்டிருந்தது.

இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றையதினம்  கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனால்; அந்தக் கல்வெட்டு அடித்து நொறுக்கப்பட்டதாக கல்முனைப் பொலிஸ் நிலையத்தில்  கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேகச் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்  ஹென்றி மகேந்திரன் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கின் முதலாவது விசாரணை கடந்த ஜனவரி 24ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டு, நேற்றுவரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்போது, பிரதிவாதி ஹென்றி மகேந்திரன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா ஆஜராகியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X