2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசிதழிழுக்குள் ‘அத்தியாவசியம்’ அடக்கப்பட்டு விடக்கூடாது

Editorial   / 2021 ஜனவரி 07 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசிதழிழுக்குள் ‘அத்தியாவசியம்’ அடக்கப்பட்டு விடக்கூடாது

ஒன்றை இழந்ததன் பின்னர்தான் அதன் அருமை தெரியுமென கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இதில், வேலைவாய்ப்பு மிகவும் முக்கியம். அதனைவிடவும் ஆட்சியதிகாரம் சிக்கல் நிறைந்தவை அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக பல்​வேறான குத்துக்கரணங்களை அடிக்கவேண்டியிருக்கும். பல்வேறான சூழ்ச்சிகள் இடம்பெற்றே ஆட்சிகள் பல கவிழ்க்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தமாற்றம் ஏற்பட்டாலும் மக்களின் பாடு திண்டாட்டம்தான்.

எனினும், அவ்வப்போது சில சலுகை அறிவிப்புகளை விடுத்து, ஆட்சியாளர்கள் மக்களை குசிப்படுத்திவிடுவர். எதற்கும் சலுகைகளை எதிர்பார்த்து கையேந்திநிற்போர் சலுகையின் கனவில் மிதந்துவிடுவர். சலுகைகான அறிவிப்புகளைக் கேட்கும்போதெல்லாம் காதுகள் குளிர்ந்தாலும் நிபந்தனைகள் முகங்சுளிக்கச் செய்துவிடும்.

யாருமே எதிர்பார்க்காத மிகவும் குறைந்த வட்டவீதத்தில் ‘உற்சவக் கடன்’ அறிவிப்பை வெளியிட்டிருந்த அரசாங்கம், ஒருசில வரையறுக்கப்பட்ட வங்கிகளின் ஊடாகவே பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இதனால், வர்த்தக வங்கிகளில் கணக்கு வழக்குகளைப் பேணும் பலரும் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

சில முக்கியமான பண்டிகைக்காலங்களில் அதிரடியான விலைகுறைப்பு சலுகை, நிர்ணயவிலை உள்ளிட்ட அறிவிப்புகளை கேட்கலாம். ஆனால், இந்த சலுகைகள் எல்லாம் முற்றுமுழுதாக மக்களை சென்றவடைதே இல்லை. இதனால், இடையில் இருப்போரே ஒரு சுழற்று சுழற்றிக்கொள்வர்.

அரசாங்கத்தின் விலைக்குறைப்புகள் அறிவிப்பு எல்லாமே வர்த்தமானிக்குள் (அரசிதழ்) அடங்கிவிடுவதாக, எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பர். ஏதோவொரு வகையில் தாங்கள் ஆட்சிப்பீடமேறிவிட்டால், அவ்வாறான பழி​ச்சொல்லுக்கே அவர்களும் ஆளாகிவிடுவிர். இதில் மாற்​றமெதுவும் இல்லை.

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து தையும் பிறக்கவிருக்கிறது. இரண்டுடொரு மாதங்களின் பின்னர், தமிழ்-சிங்கள புத்தாண்டும் பிறக்கவிருக்கின்றது. இவ்வாறான நிலையிலேயே 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

தைப்பிறந்தால் வழிப்பிறக்கும் என்பர், அமைச்சரின் இந்த அறிவிப்பு வழிப்பிறக்கச் செய்யவேண்டும் வலிக்கவைத்துவிடக் கூடாது. வேலைவாய்ப்புகள் இன்றி, வருமானமின்றி கொ​ரோனாவின் கொடுமைக்குள் வாழ்ந்து​கொண்டிருக்கும் மக்களுக்கு விலைக்குறைப்பு இனிப்பானச் செய்தியாய் இருப்பதைப்போல யதார்த்தமாகவும் இருக்கவேண்டும்.

வயிற்றுப்பசி​யை போக்கினால் மட்டுமே நிம்மதியாக இருக்கமுடியும். இந்​நேரத்தில் பொருட்களின் விலைகளை அதிகரித்தால் சாதாரண பொதுமக்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். மூலதனமிட்டவருக்குத்தான் அதன் அருமைத்தெரியு​மென கூறக்கூடும். அதிலும் தவறில்லை. ஆனால், திக்குமுக்காடி கொண்டிருக்கும் சூழ்நிலையை சந்தர்ப்பமாக பயன்படுத்திவிடக்கூடாது.

ஆங்கில புத்தாண்டு பிறந்த இரண்டொரு நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு அறிவிப்பு நிதர்சனமாய் இருக்கவேண்டும். அதிலிருந்தாவது ஒவ்வொரு மக்களின் மனங்களிலும் தெம்பு பிறக்கவேண்டும். அதுவே, இவ்வருட இறுதிவரைக்கும் இழுத்துச் சென்று, புதுபுது சாதனைகளுக்கு வழிசமைக்கவேண்டும். ஆகையால், இனிப்பான அந்தச் செய்தி கசந்துவிடக்கூடாது என்பதே மக்களின் அவா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .