2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரண்டாம் அலையில் ‘ஏ-9’ நர்த்தனமும் நியாயமான அச்சமும்

Editorial   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாம் அலையில் ‘ஏ-9’ நர்த்தனமும் நியாயமான அச்சமும்

''அவர், இருந்திருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா'' என, வெளிப்படையாகக் கேள்விகளைக் கேட்போரும், மனதுக்குள்ளேயே கேட்டுக்கொள்வோரும் இருக்கத்தான் செய்வர். அவ்வாறானவர்கள், மக்களின் நலன்கள் மீது அதீதமான அக்கறையைக் காண்பிப்பவர்களாகவே இருப்பார்கள். பலரையும் உதாரண புருஷர்களாகக் கூறலாம்.

சிலரது மரணங்கள் பேசப்படுவதே இல்லை. சமூகத்துக்கு நல்லது நடக்கும்போது, கைகளைக்கொட்டித் தட்டிக்கொடுப்பதும் சமூகத்துக்கு வேண்டாதவைகளை எதிர்த்து நிற்பதுமே தலைவனுக்கு அழகு. அவ்வாறானதொரு நிலைமைக்கான வெறுமையையே> வடக்கு புடம்போட்டுக் காட்டுகின்றது.

தாங்கள், தங்களது சமூகம், சுற்றாடல் ஆகியவற்றுக்கு எதிரான ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் எதிராக அங்கிருக்கின்ற மக்கள், ஏதோவொரு வகையில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். உரிமைகளுக்கான குரல் ஓயாதிருக்கும் அதேநேரம், சுரண்டல்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர்.

வளங்கள் சுரண்டப்படுவதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சித்த ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். வளச்சுரண்டல்கள் வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, முழுநாட்டிலும் தலைவிரித்தாடுகின்றது. இது, எதிர்கால சந்ததியினருக்கு 'இடுகாட்டை' விட்டுச்செல்வதற்கு வழிசமைக்கும்.

மாற்றுப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், மற்றையவர்களின் மண்ணுக்குள்ளே குழிதோண்டிச் சுரண்டுவதை, எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது, தமக்குத் தாமே குழித்தோண்டிக்கொள்ளும் செயற்பாடாகும்.

'நெருப்பை நெருப்பாலோ, வெறுப்பை வெறுப்பாலோ நீக்க முடியாதென்பது' புத்தனின் வாக்கு. அப்படியிருந்தாலும், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சகல செயல்களுக்கும் பொறுமை காத்துகொண்டிருக்க முடியாது. அதனை, 'இழிச்சவாய்த்தனம்' என்று பலரும் கற்பிதம் செய்வர்.

எந்தப் பக்கத்தில் இருக்கின்றோம் என்பது பிரச்சினையில்லை. மக்களுக்கும் சமூகத்துக்கும் நெருக்குவாரங்கள் கொடுக்கப்படும் போது, மக்களோடு மக்களாக இருந்து, எதிர்ப்புக் குரலைக் கொடுக்கவேண்டும். இல்லையேல், குப்பைகளை எல்லாம் கொண்டுவந்து கொட்டிவிடுவர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எங்கு புதைப்பதென்ற பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கிலும் கிழக்கிலும் இடங்கள் தேடப்பட்டன. தற்போது, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை, வடக்கில் கொண்டுவந்து கொட்டிவிடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவரேனும் இனங்காணப்படாத கண்டி, கொரோனா வைரஸ் தொற்றின் மய்யமாக மாறிவிட்டது. போகம்பரை பழைய சிறைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளால், கண்டியையும் கொரோனா ஆட்கொண்டுவிட்டது.

எனினும், அங்கிருக்கும் கைதிகள், ஐந்து பஸ்களில் ஏற்றப்பட்டு கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அச்செயற்பாட்டுக்கு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்கள், ஏ-9 வீதியின் வழியாகவே அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் மூடுவதற்கும் திறப்பதற்கும் பெயர் பெற்றிருந்த ஏ-9 வீதியில், கொரோனா நர்த்தனம் ஆடுகிறது. அவ்வாட்டத்துக்கு மக்களைத் தவிர, ஏனைய சகலரும் கைகளைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது, 'வடக்கு கொத்தணி'க்கு வழிசமைக்கும். (08.12.2020)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .