Janu / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களுக்கு எதிராக அதிபர், ஆசிரியர்களால் எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் சமூகத்தில் ஒரு வலுவான அதிர்ச்சியை உருவாக்குகின்றன. மாணவன் அல்லது மாணவியின் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவங்கள் அண்மைய காலங்களில் இடம்பெற்றுள்ளன.
பாடசாலையில் இருந்து விடுகைபத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு சென்றிருந்த மாணவனின் தந்தையின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிபர், தனியார் பாடசாலையைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, பாடசாலைக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய சதவீதமும் குறைவிடும் என்ற ஆதங்கத்தில் இவ்வாறு நடந்திருக்கலாம்.
தனியார் பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவன் ஒருவர் அரசாங்க பாடசாலைக்கு மாற்றலாகி செல்லவேண்டுமாயின், தரம்-06 அல்லது உயர்தரத்துக்கே மாற்றலாகி செல்லமுடியும். இடைநிலை வகுப்புகளுக்கு செல்வது கடினமாகும். அதற்கு அரசாங்க பாடசாலைகளில் வெற்றிடம் இருக்கிறதா? என்பதையெல்லாம் தேடிபார்க்கவேண்டும். எனினும், தாக்குதலுக்கு உள்ளாகிய தந்தையின் மகன், தரம்-9 இல் கல்விப்பயின்று விடுகை பத்திரத்தை பெற்றுக்கொள்ள வந்துள்ளார். இதன்போதே இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் இருந்த உறவு தற்போது குறுகிக்கொண்டே வந்துவிட்டது. தலைகுணிந்து மரியாதை செலுத்தும் மாணவர்கள், தலைநிமிர்ந்து ஆசிரியர் மீதே கையை வைக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியைகளுக்கும் மாணவனுக்கும் இடையில் ஏற்பட்ட தவறான உறவு, சமூக வலைத்தளங்களில் அம்பலமாகியுள்ளமை அறிந்ததே.
ஒரு மாணவரின் தவறை ஆசிரியர் காணும்போது, அதை அவர் சுட்டிக்காட்ட வேண்டும். அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வியை வழங்குவது மட்டுமல்ல. மாணவர்களின் குணத்தையும் ஒழுக்கத்தையும் வடிவமைப்பதும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
பாடசாலை செல்லும் குழந்தைகளின் ஒழுக்கம் மற்றும் நடத்தைக்கான பொறுப்பு பாடசாலை மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு மட்டுமல்ல என்பதை இங்கே கவனிக்க வேண்டும். வீடு மற்றும் பெற்றோருக்கும் அந்தப் பொறுப்பில் ஒரு பங்கு உண்டு. பெற்றோர்கள் வீட்டில் குழந்தைகளின் ஒழுக்கம் மற்றும் நடத்தையைப் பற்றி அக்கறை கொள்ளாவிட்டால், அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அந்தத் தவறுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றாவிட்டால், அத்தகைய குழந்தைகள் பாடசாலையில் குறும்புக்காரர்களாகவும், கொடுமைப்படுத்துபவர்களாகவும் மாறுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டும்.
பெற்றோர்கள் வீட்டில் தங்கள் குழந்தைகள் முன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டு, தங்கள் குழந்தைகள் தவறு செய்வதைக் கண்டால் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அத்தகைய குழந்தைகளிடமிருந்து ஒழுக்கமான நடத்தையை எதிர்பார்க்க முடியாது. அத்தகைய குழந்தைகளுக்கு சரிக்கும் தவறுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. இந்த சமூகத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச்செல்லவேண்டிய கடப்பாடு, ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி எதிர்காலத்தலைவர்கள் எனக் கூறப்படும் மாணவர்களுக்கும் உண்டு என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
10.02.2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .