2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டத்தின் ஓட்டைக்குள் ‘தியவன்னா கொத்தணி’

Editorial   / 2021 ஜனவரி 13 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்துகொண்ட ‘தியவன்னா கொத்தணி’

சட்டவாக்கச் சபையென அறியப்பட்ட பாராளுமன்றத்துக்குள் கொரோனா தொற்று புகுந்துகொண்டது, ஆளும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும்  இரண்டொரு அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. அது அவ்வளவுக்கு நல்ல சகுனமல்ல. 

கொரோனா அச்சமூட்டிவிட்டது. ஆனாலும், சாதாரண வாழ்க்கையின் போது, அச்சத்தை களைந்துவிட்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, வாழ்க்கையை கொண்டுநடத்துவதே உசித்தமானது. அது ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. வீட்டிலிருந்து வெளியேறி, வீடு திரும்பு வரையிலான ஒவ்வொரு நொடிப்பொழுதிலும், கொரோனா தொற்றிக்கொள்ளாவிடாது விளிப்பாக இருத்தல் அவசியம்.

கொரோனா தொற்றியிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பலர், மக்களை சந்தித்துள்ளனர். பொது வைபவங்களில் பங்கேற்றுள்ளனர். என்பதனால், மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டது எவ்வாறென அடிமுடியைத் தேடவேண்டும்.

இன்னும் சிலர், கொரோனா சட்டத்திட்டங்களை மீறி நடத்தப்பட்ட விருந்துபசாரங்கள், பிறந்தநாள் வைபவங்கள் உள்ளிட்ட இன்னோரான வைபவங்களிலும் பங்கேற்றுள்ளனர். அங்கு ஒருமீற்றர் இடைவெளி, முகக்கவசத்தை முறையாக அணிந்திருத்தல் ஆ​கியன கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆகையால், மக்கள் பிரதிநிதிகள் மிக அப்பட்டமாகவே சட்டங்களை மீறியிருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் சட்டம் பாயவேண்டும். அப்போதுதான் சாதாரண மக்கள், சட்டத்திட்டங்களை மதிப்பர், இல்லையேல் பாராளுமன்றத்தை ‘சட்டவாக்கசபை’ எனக் கூறுவதில் அர்த்தமிறாது.

இதேவேளை, தற்போதைய பாராளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பலரும், அறிவியலுக்கு ​அப்பாற் சென்று மூடநம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள், மண்பாணைகளை போட்டுடைத்தமையை ஆமோதித்தனர், கொரோனா பாணியை பருகி சுவைத்தனர். அப்படியாயின், கொரோனா தொற்றியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாணியை ஏன்? கொடுக்கக்கூடாது என்ற கருத்துப்பட சிந்தனைச் சித்திரங்களும் கீறப்பட்டுள்ளன.

எனினும், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மிகத் தெளிவாகவே உள்ளனர். சட்டத்தில் ஓட்டைகள் இருந்தாலும் சுயபாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதை அவதானிக்க முடிகின்றது. மக்கள் பிரதிநிதிகள், இனியாவது மக்களைப் பார்த்து திருந்திக்கொள்ள வேண்டும் என நாமும் வலியுறுத்துகின்றோம்.

கொரோனா கொத்தணிகள் பல உருவாகின, பல மறைந்துவிட்டன: இன்னும் பல கொத்தணிகள் உயிரோட்டமாய் வீரியத்துடன் இருகிறன. இவ்வாறான நிலையில், ‘தியவன்னா ​கொத்தணி’ உருவாகிவிடுமோ எனும் பேரச்சமும் சந்தேகமும் வெகுவாக வலுவடைந்துள்ளது. அதற்கு யாரும் இடமளித்துவிடக்கூடாது.

எனினும், சட்டங்களை தயாரிக்கும் சட்டவாக்க சபைக்குள் இருப்போர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கும் படங்களை பார்க்குமிடத்து, சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து விளையாட்டிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். சட்டம், சகலருக்கும் சமமானதாகவே இருக்கவேண்டும். அப்​போதுதான் இவ்வாறான தொற்றுக்களை தொலைத்தூரத்துக்கு தூக்கியெறிந்துவிடலாம். , ‘தியவன்னா ​கொத்தணி’ இன்னுமின்னும் உயிர்ப்பெறாமல் இருப்பதை தடுக்கலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .