2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் காணி சுவீகரிப்பும்; கிழக்கில் முளைத்த புத்தர் சிலையும்

R.Tharaniya   / 2025 மே 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாமெல்லாம் ஒரு தாய் மக்கள், இங்கு பேதங்கள் இல்லை, எமது ஆட்சியில் எல்லோரும் சமமாக மதிக்கப்படுவார்கள் என புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர், பாராளுமன்றத்திலும் வெளியிலும் பகிரங்கமாக உரையாற்றுகின்றனர்.

எனினும், அவ்வாறான அமைச்சர்கள் இருக்கும்  அரசாங்கத்தால், வடக்கு, கிழக்கில் கடுமையான பாரபட்சம் காட்டப்படுகிறது.

வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம், கிழக்கில் புத்தர் சிலைகள் முளைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்ற முடியாது.

அகற்றினால், அது வேறு பிரச்சினைகளை தூண்டிவிடும். ஆனால், எங்கெல்லாம் புத்தர் சிலைகளை வைக்கலாம். அல்லது வைக்கக்கூடாது என்பது தொடர்பில் வரையறைகளைக் கொண்டு வர வேண்டும். அது அரசாங்கத்துக்கு இயலாத காரியமாகும்.

சிறுபான்மை இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் வேறு மதங்களைச் சேர்ந்த அடையாள சின்னங்களை வைப்பதன் அர்த்தம் என்ன? அதேபோல், பரம்பரையாக தங்களுடைய வழிபாட்டிடங்களை அபகரிக்கும் வகையில், இவ்வாறு புத்தர் சிலைகளை முளைக்க வைப்பது ஏன்? இவை கூட இனங்களுக்கு இடையில் மன கசப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும்.

அரசியல் வேறு, மதம் வேறு என்பதை அரசியல்வாதிகளும் மக்களும் புரிந்து கொள்ளாத வரையிலும், சிலைகள் முளைக்க வைக்கப்படும்.

பெரும்பான்மை கட்சிகள் சிலவற்றைப் பொறுத்தவரை, பௌத்தத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்  அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியானால், கண்டி ​எசல பெரஹர கூட நடைபெறாது என எதிரணியினர் பிரசாரம் செய்தனர்.

ஆனால், கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புனித சின்னமான ‘தந்ததாது’வை பொதுமக்கள் தரிசிப்பதற்கான வாய்ப்பு 16 வருடங்களின் பின்னர் அளிக்கப்பட்டது.

அதனையும் ஒரு சிலர் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தினர். ஆக அரசியலுக்கு மத உணர்வைக் கிளறிவிடாமல், சில பெரும்பான்மை கட்சிகளுக்கு அரசியல் செய்ய முடியாது என்பதே உண்மையாகும். 

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வடக்கு, கிழக்கில் பல புத்தர் சிலைகள் முளைக்க வைக்கப்பட்டன. தொல்பொருள் அகழ்வாராய்ச்சி எனும் போர்வையில் தமிழ் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டன. தற்போதும், பகிரங்கமாக புத்தர் சிலைகள் முளைக்க வைக்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இப்போதும் இராணுவ முகாம்கள் உள்ளன. இராணுவ வசமே பெரும்பாலான காணிகள்  உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பகுதிகளில் மக்கள் இப்போதும் அகதிகளாக தனியார் வீடுகளிலும் முகாம்களிலும் வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதங்களை வழிபாட்டு உரிமையைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. எனினும், வேறு மதங்களைப் பின்பற்றுவோரின் உரிமையை அபகரிக்கும் வகையில் செயற்படவும் கூடாது. ஆகையால், வடக்கில் காணி விடயத்திலும் கிழக்கில் புத்தர் சிலை விவகாரத்திலும் அரசாங்கம் சிந்தித்துச் செயல்படு​வதே உசிதமானது.

27.05.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .