Freelancer / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பணி இடமாற்றலில், வேறொரு பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர் ஒருவரை, அப்பாடசாலையின் முன்னாள் மாணவர்கள், சீர் வரிசை, தாரைதப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தா.சொக்கநாதபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ராஜேஸ்வரி என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் பணியில் சேர்ந்தது முதல் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பயிற்றுவிப்பது மட்டுமில்லாமல் மாணவர்கள் நலனில் அக்கரையோடு அன்பையும் ஊட்டி கற்பித்து வந்ததால் மாணவர்கள் அவர் மீது பற்றுதலுடன் இருந்துள்ளனர்.
ஆசிரியை என்ற நிலையையும் தாண்டி மாணவர்களின் தாயைப்போன்று இருந்து மாணவர்கள் இப்பாடசாலையில் நடுநிலைக் கல்வியை முடித்து அடுத்த பாடசாலைக்கு சென்றாலும் அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தையும் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் உயர்கல்விக்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.
மேலும் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கும் உதவி செய்துள்ளார். இதனால் அவர், மாணவர்கள் மத்தியில் ஒரு ஆசிரியையாகவும், தாயாகவும், நண்பராகவும் இருந்து அவர்களை வழிநடத்தும் போற்றுதலுக்குறிய பணியினை செய்து மாணவர்களின் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.
மிகவும் பின்தங்கிய கிராமத்தில் மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியாக சிறப்பான பணியினை செய்து வந்ததால் பெற்றோர்களும் ஆசிரியை மீது அதீத பற்று கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியை ராஜேஸ்வரிக்கு அவரது சொந்த மாவட்டமான திருப்பூருக்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவரது பணியினை போற்றும் விதமாக முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு அவருக்கு விளம்பர பதாகை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், கடைசி நாளான இன்று பாடசாலைக்கு வந்த அவருக்கு பட்டாசு வெடித்து, தப்பாட்டத்துடன் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றுள்ள அதேநேரம், பழங்கள், இனிப்பு வகைகள், காய்கறிகள், தேங்காய், வாழைப்பழம், புடவை என சீர் வரிசைப்பொருட்களை தட்டில் வைத்து ஆசிரியரை பாடசாலைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.S
10 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
54 minute ago