2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

நடிகை சித்ராவின் கணவன் கைது

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீபெரும்புதூர்:

  நடிகை சித்ராவின் தற்கொலை  தொடர்பாக அவரது குடும்பத்தினர் விசாரிக்கப்பட்ட பின்னர்,சித்ராவின் கணவன், தற்கொலைக்குத் தூண்டியதாக நசரத்பேட்டை பொலிஸார்  ஹேம்நாத்தைக் கைது செய்தனர்.

 இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டைபொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத் துக்கும் பதிவு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் இரத்த காயங்கள் இருந்துள்ளன. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா? என பொலிஸார்  விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தர விடப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்காக நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்து க்கு வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். 12 மணிக்கு விசாரணை தொடங்கி 3 மணி நேரம் நடைபெற்றது.

 

விசாரணை முடிந்து வெளியில் வந்த சித்ராவின் தாய் விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

விசாரணை முடிந்த பின்பு முழு தகவலை அளிக்கிறோம். எந்த ஒரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக மாட்டார். சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேம்நாத் தான் காரணம். அதற்கான விவரங்களை ஆர்.டி.ஓ. விசாரணையில் கூறியுள்ளோம். மீண்டும் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. இன்று விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை பொலிஸார்  ஹேம்நாத்தைக் கைது செய்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .