2026 மார்ச் 04, புதன்கிழமை

பொங்கியெழுந்தார் விஜய காந்த்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 06 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காவிரி நீர் பாயும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும் டெல்டா மாவட்டங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. 

இந்நிலையில் குறித்த டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான அறிவிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல உள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏற்கெனவே, வறட்சி, மழை நீரில் மூழ்கி விளை நிலங்கள் சேதம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழலில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

மேலும், நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும். மேலும், விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும்.

 விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தே.மு.தி.க தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .