2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

115 டொலராக அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

Freelancer   / 2026 மார்ச் 20 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது முக்கிய எரிவாயு வயல்களில் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, பல வளைகுடா எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாலும், தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளதாலும் நேற்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 115 டொலரைத் தாண்டியது. மேலும், பங்குச் சந்தைகளும் சரிந்தன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி  28 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகவும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ஈரானில் உள்ள முக்கிய எரிவாயு வயலான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, கத்தாரின் ராஸ் லஃபான் ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், கத்தார் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் சேதமடைந்தது. அதோடு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் எரிந்து சாம்பலானது.

மேற்கு ஆசியாவில் நிலவும் இந்தப் பதற்றமான சூழல் காரணமாக சர்வதேச சந்தைக்கான எரிபொருள் வரத்து குறைந்து வருகிறது. இதனால், எரிபொருள்களின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 115 டொலரைத் தாண்டி உள்ளது. ஐரோப்பாவில் எரிவாயு விலை 30 வீதம் உயர்ந்துள்ள நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் 7 வீதம் அதிகரித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X