2026 மார்ச் 23, திங்கட்கிழமை

“அமெரிக்கா தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்”

S.Renuka   / 2026 மார்ச் 22 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் கடுமையான போர் மூண்டுள்ளது.

இந்தச் சூழலில் ஒருவேளை அமெரிக்க தேசம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியான அப்துல் பாசித் கருத்து தெரிவித்துள்ளார். அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.


“பகைமை கண்ணோட்டத்தில் அமெரிக்கா நமது அணு சக்தி தளங்களை அழிக்கும் முயற்சியை மேற்கொண்டால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும். முதலில் அது போல ஒன்று நடக்காது. அதற்கு சாத்தியம் இல்லை. ஏனெனில், நமது பாதுகாப்பு திறன்பாடு மீது நம்பிக்கை உள்ளது. இருப்பினும் அது மாதிரியான சூழல் நடந்து, அமெரிக்கா நமது ஏவுகணை வீச்சின் தொலைவுக்கு அப்பாற்பட்ட எல்லையில் இருந்தால் நமது பதிலடி தாக்குதலை மேற்கொள்ள இந்தியா மட்டுமே இருக்கும்.

மும்பை, டெல்லி என எங்கு வேண்டுமானாலும் எந்தவித யோசனையும் இன்றி தாக்குதல் நடத்த கூடும். அதன் பிறகு என்ன நடக்கிறது, அதன் விளைவு என்ன என்பது குறித்தெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. கல்வி அறிவு பெற்றவரோ, பெறாதவரோ, பணம் படைத்தவரோ, பணம் இல்லாதவரோ என யாராக இருந்தாலும் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும் ‘ஜிஹாதி’தான்” என அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்து வெறும் அனுமானம்தான் என்றாலும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. புவிசார் அரசியல் அசாதாரண சூழல் உலக அளவில் நிலவி வரும் வேளையில் அப்துல் பாசத்தின் கருத்து மேலும் மோசமடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை இந்தியா தாக்கியது. அதைத்தொடர்ந்து எல்லையோர மாநிலங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. இதன் பின்னர் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தமானது. இந்நிலையில், அப்துல் பாசித் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .