2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

உக்ரேனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்

Mithuna   / 2024 பெப்ரவரி 23 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரேனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரேனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.

இந்நிலையில், உக்ரேனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பிரச்சினை உருவானது.

இந்த விவகாரம் நாளுக்குநாள் வலுத்து, பெரிய அளவில் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் போலந்து விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். உக்ரேனுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளையும் மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். அத்துடன் சிலர் ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த செயல் உக்ரேனின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது.

இதையடுத்து போலந்து விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக போலந்து தலைவர்களுக்கு உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-

“இரு நாடுகளின் விவசாயிகளும் ஒருவரையொருவர் அவமதிக்கக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். உக்ரேன் மற்றும் போலந்து இடையே மட்டுமல்லாமல் முழு ஐரோப்பா அளவிலும் தீர்வு தேவை. விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக விவாதித்து தீர்வு காண்பதற்காக எல்லையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவடைய (பிப்ரவரி 24) உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போலந்து பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோருடனான சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம்.” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X