2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

கனடாவிலுள்ள அகதிகளுக்கான சட்டம் அமுல்

S.Renuka   / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடடாவில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு முறையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் C-12 சட்ட மூலம் (Bill C-12)  உத்தியோகபூர்வமாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான இந்தச் சீர்திருத்தம், அகதித் தஞ்சக் கோரிக்கைகளுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதுடன், விசாக்களை இரத்து செய்யும் அதீத அதிகாரத்தை கனேடிய அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

இந்தச் சட்டத்தின்படி, அகதித் தஞ்சம் கோருபவர்களுக்குப் புதிய ஓராண்டு விதி நடைமுறைக்கு வந்துள்ளது. கனடாவிற்குள் நுழைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தஞ்சம் கோராதவர்கள், இனிமேல் அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாது என அறிவிகப்பட்டுள்ளது.

இந்த விதி 2020-ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு (Retroactive) அமல்படுத்தப்படுவதால், சுமார் 19,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ எல்லைச் சாவடிகள் அன்றி, மற்றைய வழிகளில் கனடாவுக்குள் நுழைபவர்கள் 14 நாட்களுக்குள் தஞ்சம் கோர வேண்டும் எனவும் இல்லையெனில் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், Bill C-12 எனப்படும் இந்த புதிய சட்டத்தின் மூலம், பொது நலன் அல்லது தேசியப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி விசாக்களை இரத்து செய்யும் அல்லது இடைநிறுத்தும் அதிகாரம் ஆனது, மத்திய அரசின் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தஞ்சம் கோருபவர்களின் உரிமைகளை இது பறிப்பதாகவும், சித்திரவதைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்பும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2026-ஆம் ஆண்டிற்குள் 5 சதவீதமாகக் குறைக்க கனேடிய அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தைச் செயற்படுத்தவுள்ள இந்த Bill C-12 சட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் மற்றும் பிளக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சிகளும் வாக்களித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .