2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாடசாலை கால்ப்பந்தாட்ட அரையிறுதி போட்டிக்கு தெரிவான அணிகள்

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன், நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி,யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி, யாழ்ப்பாணம் சென்பக்றிஸ் கல்லூரி ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

யாழ்.மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் 1980 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் கால்ப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் அஞ்சல் ஓட்ட காணிவேல் விழா ஆகியவற்றினை நடத்தி வந்தது.

தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தச் சங்கம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு முதல் மீண்டும் யாழ்.மாவட்ட பாடசாலைகள் சங்கம் ஆரம்பிக்கத் தொடங்கியதுடன், அதன் தலைவராக மானிப்பாய் இந்து கல்லூரியின் அதிபர் சம்பந்தசரணாலயம் சிவநேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்தியிருந்தது. அந்தப் போட்டியில் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியிருந்தது.

2013 ஆண்டுப் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டு, நேற்று (17) திகதி முதல் யாழ்;பாணம் மத்திய கல்லூரி, மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரி ஆகிய மைதானங்களில் நடத்தப்படுகின்றன.

இம்முறை சுற்றுப்போட்டியில் யாழ்.மாவட்ட பாடசாலைகளிலிருந்து 15 அணிகள் பங்குபற்றியிருந்தன.

மானிப்பாய் இந்துக்கல்லூரி  மைதானத்தில் இடம்பெற்ற  தெரிவுப் போட்டியில்,

மானிப்பாய் இந்து கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணியினையும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 3:1 என்ற கோல் கணக்கில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினையும், இளவாளை ஹென்றிஸ் கல்லூரி அணி 3:2 என்ற கோல் கணக்கில் தேவரையாளி இந்து கல்லூரி அணியினையும் வென்றன.

சிதம்பராக் கல்லூரி அணி சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளாமையினால், ஊர்காவற்றுறை சென்.அன்ரனீஸ் அணி இரண்டாம் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

அதேவேளை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற தெரிவுப் போட்டிகளில்,

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 3:1 என்ற கோல் கணக்கில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியினையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் உரும்பிராய் இந்து கல்லூரி அணியினையும், வசாவிளான் மத்திய மகா வித்தியாலய அணி 3:0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினையும் வென்றன.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி பை மூலம் அடுத்தசுற்றுக்குத் தெரிவாகியது.

அதனை தொடர்ந்து முதல் சுற்றில் வெற்றிபெற்ற அணிகளுக்கான காலிறுதி ஆட்டங்கள் இடம்பெற்றன.

இதில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 4:0 என்ற கோல் கணக்கில் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தினையும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணியினையும், மானிப்பாய் இந்து கல்லூரி அணி 3:1 என்ற கோல் கணக்கில் சென்.அன்ரனீஸ் அணியினையும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் புனித ஹென்றிஸ் கல்லூரி அணியினையும் வென்றன.

தொடர்ந்து அரையிறுதிப்போட்டிகள் திங்கட்கிழமை (20), மறுநாள் (21) மின்னொளியில்  இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளதாக பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் தெரிவித்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X