2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 06 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், நீண்டநாள் இடைவெளிக்குப் பின்னர் மற்றுமொரு சம்பியன் கிண்ணத்தை, புத்தளம்  நகரின் பிரபலமான ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகம் கைப்பற்றியுள்ளது.

புத்தளம் சிட்டி கலக்சி கிரிக்கெட் கழகம் நடாத்திய "சிட்டி கலக்சி கூல் அன்ட் கூல் வெற்றிக்கிண்ணத்துக்கான" இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி, புத்தளம் இஜ்திமா மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.

லீக் சுற்றிலான இந்தப் போட்டித் தொடரானது, கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. "ஏ" மற்றும் "பீ" பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டித் தொடரில், புத்தளம், தில்லையடி பிரதேசங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்குபற்றின.

இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், புத்தளம் ட்ரகன்ஸ் அணியும், புத்தளம் அல் ஜெஸீரா அணியும் சந்தித்துக்கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய அல் ஜெஸீரா அணி 10 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கட் இழப்புக்கு 73 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு, 74 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய புத்தளம் ட்ரகன்ஸ் அணி 6.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 74 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றதோடு இரண்டாம் இடத்தினை அல் ஜெஸீரா அணி பெற்றுக்கொண்டது.

சிறந்த துடுப்பாட்ட வீரராக ட்ரகன்ஸ் அணியின் சிறந்த வீரர் எம்.அஸ்கீன் தெரிவானார். சிறந்த பந்து வீச்சாளராக  அல் ஜெஸீரா அணியின் ஹாமீமும், தொடர் நாயகனாக ட்ரகன்ஸ் அணியின் ரியாஸ்தீனும் தெரிவாகினர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக போட்டி தொடரின் பூரண அனுசரணையாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், தொழிலதிபருமான எம்.ஏ.எம்.அஸ்கின் கலந்து கொண்டு சம்பியன் அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார். தொடரின் இணை அனுசரணையாளரும், ட்ரகன்ஸ் கிரிக்கட் கழகத்தின் உரிமையாளருமான ஏ.ஆர்.எம். ரிஸ்பாக் இரண்டாம் இடத்தினை பெற்ற அணிக்கான கிண்ணத்தினை வழங்கி வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .