2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பியனானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றிவாகை சூடியுள்ளது.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி, அண்மையில் இடம்பெற்றது. இதில், ஒன்பது பிரதேச செயலகங்களின் அணிகள், இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதுடன், இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் மண்முனைப்பற்று பிரதேச செயலக அணியும் தெரிவாகியிருந்தது.

இந்நிலையில், இத்தொடரின் இறுதிப்போட்டி, ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மண்முனைப்பற்று பிரதேச செயலக அணி, பத்து ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி, 8.3ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், வெற்றியிலக்கையடைந்து, இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக, மண்முனைப்பற்று பிரதேச செயலக அணியைச் சேர்ந்த செ.டிலக்சன் தெரிவாகியதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக, பட்டிப்பளை பிரதேச செயலக அணியைச் சேர்ந்த கே.வினோகாந்தன் தெரிவாகியதுடன், தொடராட்ட நாயகனாக, மண்முனைப்பற்று பிரதேச செயலக அணித்தலைவர் கே.சுரேந்திரனும் இறுதிப்போட்டியின் நாயகனாக, மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியை சேர்ந்த அ.கிருஷாந்தலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான சம்பியனாக மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி தெரிவுசெய்யப்பட்டதுடன், இரண்டாமிடத்தினை மண்முனைப்பற்று அணியும் மூன்றாமிடத்தினை வாழைச்சேனை பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இறுப்போட்டி பரிசளிப்பு நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அவர் தவிர, உதவி பிரதேச செயலாளர் திருமதி லக்ஷனியா பிரசாந்தன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .