Freelancer / 2026 ஜனவரி 03 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
2006ம் வருடம் ஜனவரி 2ம் திகதி மாலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை திருகோணமலை ஒரு திகிலான அனுபவத்தை சந்தித்தது.
அந்த இடங்களில் பல இளைஞர்கள் இருந்தார்கள். எத்தனையோ சாட்சிகள் இருந்தது.
கடற்கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த அப்பாவி 5 மாணவர்களை எந்த காரணமும் இல்லாமல் வெறித்தனமாக கொன்றது விசேட அதிரடிப்படை.
அடுத்த நாள் அதிகாலையில் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட அந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.
அன்று முழு நகரமும் பேரதிர்ச்சியில் மூழ்கிப்போயிருந்தது. அதன் பின் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் இறுதிச் சடங்கு இடம்பெற்றது.
இதன் பின்னர் நீதி கேட்ட பெற்றோர்கள் மிரட்டப்பட்டார்கள். இந்த கொலை நிகழ்ந்து 31வது நாள் நிகழ்வில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொது வெளியில் கருத்து தெரிவித்த பெளத்த பிக்கு ஒருவர் அடுத்து வந்த சில தினங்களில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பான பல தகவல்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை முன் எடுத்துச் சென்ற பெற்றோரில் ஒருவரான வைத்தியர் மனோகரன் அவர்கள் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
சென்ற வருடம் இந்த வழக்கின் நிலையும் அடுத்த கட்டமும் தொடர்பாக மீண்டும் சர்வதேச மன்னிப்பு சபையிடம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலர் பேசியிருந்தனர்.
மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , ஹொட்டகதெனிய என்று இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பட்டியல் இன்று வரை நீள்கின்றது.
கடற்படையினர் சிலர் கைதாகி போதிய சாட்சியம் இல்லை என்று விடுதலையாகியிருந்தனர்.
இலங்கை அரசின் கொலைகள் ஆயிரக்கணக்காக இருந்தாலும் இந்த கொடூரக் கொலை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில்,யுத்தம் கூட இடம்பெறாத பகுதியில் இடம்பெற்றது.
இதற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
நீதிக்கான போராட்டத்தின் இறுதியில் கொலையுண்ட மாணவன் ரஜீகரின் தந்தையான வைத்தியர் மனோகரன் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இறந்து போனார்.
திருகோணமலை டொக்யார்ட் வீதி, பெரிய கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம்.
02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர்.
கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார். இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த அதிரடிப்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த படையினர் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
மாணவர்கள் இச்சம்பவம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்து முழங்காலில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றதாக கண்கண்ட சாட்சிகள் உள்ளன. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 05 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 05 மாணவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் விபரம்
01. லோகிதராசா ரொகான்
02. சண்முகராஜா சஜீந்திரன்
03. மனோகரன் ரஜீகர்,
04. தங்கத்துரை சிவானந்தன்
05. யோகராஜா கேமச்சந்திரன்


22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026