2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கவிஞர் ஏ.ஜி.எம்.சதக்கா: ஒரு நினைவுக் குறிப்பு

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஷ்ரஃப் சிஹாப்தீன்


வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் ஏ.ஜி.எம்.சதக்கா கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்.

    வாழைச்சேனை - மட்டக்களப்பு நெடுங்சாலையில் 20ஆம் திகதி பகல்வேளை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மாலை அங்கிருந்து விசேட விமானம் மூலம் கொழும்பு பெரிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட போது இரவு 9.00 மணியளவில் உலகைப் பிரிந்தார்.

     கவிஞர் ஏ.ஜி.எம்.சதக்கா 1999ஆம் ஆண்டு சென்னையில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தை ஸ்தாபித்தவர்களில் ஒருவராவார். அதுமட்டுமன்றி ஆய்வகத்தின் அடிப்படை யாப்பை உருவாக்கியவர்களுள் அவரும் ஒருவராக இருந்தார். 2002ஆம் ஆண்டு அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் அவர் பெரும் பங்கு வகித்தார். மாநாட்டு மலர், ஆய்வுக் கட்டுரைக் கோவை ஆகியவற்றுக்கான கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றைத் திருத்தியமைப்பதிலும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக கொழும்பில் தங்கியிருந்து தனது பெரும் பங்களிப்பை வழங்கினார்.

    மாநாட்டில் வெளியிடப்பட்ட முக்கிய நூல்களில் ஒன்றான 'மீஸாக் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்' கவிதைத் தொகுதியைத் தொகுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அதற்கான முன்னுரையையும் அவரே எழுதினார்.

    இலக்கியத் துறையோடு மாத்திரம் தனது செயற்பாட்டைக் குறுக்கிக்கொள்ளாமல் பொதுச் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிரதேசத்தின் அரச சார்பற்ற நிறுவனமான சிம் ஸ்ரீலங்காவில் நீண்ட காலம் சபை உறுப்பினராகச் செயற்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்ட கால உறுப்பினர்களுள் ஒருவராகவும் இருந்தார்.

    'த போஸ்ட்' , 'நஜா' போன்ற பத்திரிகைகளை நடத்தி, பிரதேச செய்திகளை சகலரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தினார். 'யாத்ரா' கவிதைச் சஞ்சிகையின் உதவியாசிரியர்களுள் கவிஞர் சதக்காவும் ஒருவர். 1988ஆம் ஆண்டு 'இமைக்குள் ஓர் இதயம்' என்ற கவிதைத் தொகுதியையும் 1998ஆம் ஆண்டு 'போர்க்காலப் பாடல்கள்' என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். போர்க்காலப் பாடல்கள் கவிதைத் தொகுதி அவ்வாண்டுக்கான சிறந்த கவிதைத் தொதிக்கான 'விபவி' பரிசைப் பெற்றது. இந்த நூலின் வெளியீட்டு விழா கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

    இயல்பாகவும் மிகவும் எளிமையாகவும் சகலருடனும் நட்புப் பாராட்டும் பண்பு அவருக்கிருந்தது. அதேபோன்று பொதுநல விடயங்களில் முன்னின்று உழைப்பதில் மிகுந்த உற்சாகம் காட்டுவார். ஒரு நல்ல இலக்கியவாதியாக மட்டுமன்றி சகலருடனும் மலர்ந்த முகத்துடன் பழகும் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார். தன்னை முற்படுத்திக் கொள்வதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளாத பண்பாளராகவும் அவர் இருந்தார்.

    ஓர் ஆசிரியரான கவிஞர் சதக்கா- மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரினது துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
 


You May Also Like

  Comments - 0

  • sajahan Saturday, 27 August 2011 05:33 AM

    நான் சதக்கா ஆசிரியரை நானா என்றே அழைப்பேன். அவருடனான தொடர்பு நீண்டது.மரணிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் சுபஹ் தொழுத பின் நீண்ட நேரம் பல்வேறு விடயங்களையும் பேசிக் கொண்டிருந்தோம். அது தான் அவருடனான கடைசி சந்திப்பு. அதன் பின் இரொண்டொரு தடவை மோட்டார் சைக்கிளில் சென்றதை கண்டிருக்கிறேன். அவரது மரணச் செய்தி இடியாகத்தான் இருந்தது. எனது தந்தையின் மரணத்திற்குப் பின் நான் கண்ணீர் சிந்தியது எனது சதக்கா நானாவுக்குத்தான். அல்லாஹ் அவருக்கு இந்த றமழானுடைய இறுதிப்பத்தில் இருக்கும் நாம் சுவா்க்கத்தை கொடுக்க பிராத்திபோம்.

    Reply : 0       0

    மெளனகுரு Saturday, 27 August 2011 10:28 AM

    சதக்கா பண்பான ஒரு மனிதர்.
    பழகுதற்கு இனியவர்.

    Reply : 0       0

    By Najith Monday, 29 August 2011 05:21 PM

    Sathaka teacher yenethu uravinerahe irunthalum urevai vittu printhethai vide samuhethai vittu printhethu perum kavelai alikkirathu.

    Averin ileppu kalkuda samuhethin ileppahum. averin peniyai thodere suyenelem illathe nelle panpadu mikke oru ilanger kooddam uruvha vandum.

    Reply : 0       0

    Dean Tuesday, 30 August 2011 01:12 PM

    சிம் சிறிலங்காவில் இருந்ததை தவிர மற்ற எல்லா விடயங்களிலும் சதக்கா சரியாகத்தான் இருந்துள்ளார் . ஏன்தான் சிம்மில் இணைந்தாரோ! இருந்தாலும் அதைப்பற்றி அறிந்து விலகி விட்டார் . அவரது சமூக, இலக்கியப் பணிகள் நம்மால் தொடரப்பட வேண்டும். நன்றி அஷ்ரப் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .