2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

என்ன சொல்ல வருகிறது இலங்கை அரசு?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் சாசனத்தின் பதிமூன்றாவது திருத்தம் குறித்து பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தொடக்கி வைத்துள்ள சர்ச்சை இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்குமோ, அதைவிட அதிகமாகவே சர்வதேச சமூகத்தின் முன் அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் நான்கு வருடத்திற்கு ஒருமுறை அரங்கேறும் இலங்கைக்கான மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நேரத்தில் இத்தகைய கருத்துக்கள் பிரச்சினைக்கு வலிமை சேர்க்குமே தவிர, அதன் தாக்கத்தை குறைத்துவிடாது.

ஒருவார காலத்திற்குள் இரண்டு முறை, கோட்டாபய ராஜபக்ஷ இதே கருத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இடைப்பட்ட காலத்தில், அவரது சகோதரர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள், அவர்களது வழக்கமான பாணியில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளன. இடதுசாரி கட்சிகள் பதிமூன்றாவது திருத்தம் தொடரவேண்டிய காரணங்களை பட்டியலிட்டுள்ளன. அதுபோன்றே, சிங்கள பேரினவாத கட்சிகளான ஹெல உருமயவும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர அமைப்பும் பதின்மூன்றாவது திருத்தத்தை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளன.

ஆனால் இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. ஹெல உருமயவின் பாட்டாலி சம்பிக ரணவக்க, சட்டதிருத்தம் அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவரது கட்சியின் மற்றொரு தலைவரான உதய கம்மன்பில்ல, அந்த சட்டத்தில் உள்ள சில 'ஒட்டைகள்' அடைக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளார். விமல் வீரவன்சவோ, அந்த சட்டதிருத்தம் நீக்கப்பட வேண்டும் என்று முதலில் கூறிவிட்டு, பின்னர் இது குறித்து வெகுஜன வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று, இனப்போர் முடிந்த காலகட்டத்தில், அண்மையில் பதின்மூன்றாம் திருத்தம் அகற்றப்பட வேண்டும் என்று யாரும் கருத்து கூறவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவிப்பது வரை அது பிரச்சினையாகவே இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்துள்ள வாக்குறுதியின் அடிப்படையில், உண்மை கண்டறியும் குழுவான எல்.எல்.ஆர்.சி. கருத்துக்களை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு அடிப்படையே பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தான்.

தற்போதைய பிரச்சினைகள் இல்லாமலே, நவம்பர் மாதத்திய ஜெனிவா கூட்டத்தில் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த மனித உரிமை பிரச்சினைகள் அலசி ஆராயப்படும். இது கடந்த மார்ச் மாதம் ஜெனிவா வாக்களிப்பிற்கும் அப்பால் சென்று இனப்போரை தாண்டியும் உள்ள உரிமை மீறல்கள் குறித்தும் அலசி ஆராயும் என்பது எதிர்பார்ப்பு. என்றாலும், அனைத்து உறுப்பு நாடுகள் குறித்தும் நான்கு ஆண்டிற்கு ஒருமுறை, வழக்கமாக நடைபெறும் ஆய்வு எந்த வகையில் பத்திரிகை செய்திகள் போன்றவற்றின் அடிப்படையிலான விவாதம் என்ற அளவிலேயே இது இருந்து வந்துள்ளது. தற்போது பதிமூன்றாவது திருத்தம் குறித்து அரசின் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெருவித்துள்ள நிலையில், தான் விட்டாலும் கரடி விடாத கதையாக இனப்போரை சுற்றியே ஜெனிவா ஆய்வுகள் இருக்க வேண்டும் என்பது அரசில் சிலரது நிலைப்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்த விவாதங்களுக்கு இடையில் இரண்டு முக்கிய காட்சிகள் அரங்கேறியுள்ளன. ஒன்று, பதின்மூன்றாவது திருத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான எந்தவொரு வடக்கு மாகாண அரசும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறும் தலைவர்கள் உள்ள அரசு, இது குறித்து கே.பி-யின் உதவியுடன் புலம்பெயர் தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அவர்களில் எத்தனை குழுக்களுக்கு இலங்கையில் தங்கிவிட்ட தமிழ் மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்பது ஒரு புறம். அவ்வாறு இருந்தது என்றால், கூட்டமைப்பை விட அவர்கள் எத்தனை தூரம் மிதவாத, தேர்தல் அரசியலில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பது அடுத்த கேள்வி. அப்படி என்றால், அதைவிட முக்கியமாக, அவர்களில் எத்தனை குழுக்களுக்கு கேபி-யின் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது என்பது அடுத்த கேள்வி.

இதை விட, வேடிக்கையான – அதே சமயம் விபரீதமானதுமான ஒரு கேள்வி உள்ளது. இனப்போர் காலகட்டத்தில் கருணா போன்ற விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அரசு அணியுடன் சேர்ந்தார்கள். அதற்கு விடுதலை புலிகள் இயக்கத் தலைமையே முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். அன்றைய சூழல் காரணமாக அரசு அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மன்னிப்பு அளித்து, ஏதோ ஒருவகையில் அரசில் இணைத்துக் கொண்டது. ஆனால், நாம் அறிந்த கேபி-யின் கதையே வேறு. தற்போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுவது போல் கேபி-யை எதிர்த்து குற்றச்சாட்டுகளோ தெளிவுகளோ இல்லை என்பது உண்மையானால், ஒருவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பிற போராளி தலைவர்கள் உயிருடன் பிடிபட்டிருந்தால், அரசு இதே விளக்கத்தையே அளித்திருக்குமா, என்ன?

இதற்காக, கேபி மீது அரசு எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்காதது குறித்து மட்டுமே குறை கூறுவதாக அல்ல அர்த்தம். கேபி மீதே நம்பிக்கை வைக்கும் அரசு, மிதவாத அரசியல் செய்யும் கூட்டமைப்பு தலைமை மீது நம்பிக்கை வைப்பதால் பெரிய தவறுகள் எதுவும் ஏற்பட்டு விடாது. மாறாக, முன்னாள் விடுதலைப் புலி போராளி தலைவர்கள் மீதே நம்பிக்கை வைக்கும் இலங்கை அரசும் அரசு தலைவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான மிதவாத அரசியல் அமைப்புகளை நம்ப மறுக்குமானால், அது அரசியல் தீர்வு குறித்து அரசின் நம்பகத்தன்மை மீது புதிய கேள்விகளையே எழுப்பும்.

அதே சமயம் கூட்டமைப்பு தலைமையுடன் கொழும்பில் உள்ள சீன அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை குறித்து இரு தரப்பாரின் இரண்டாவது சந்திப்பு என்றே இதனை கொள்ள வேண்டும். முந்தைய சந்திப்பு ஜெனிவா வாக்களிப்பிற்கு முன்னரே நடைபெற்றது. அதுபோன்றே கடந்த வருடம், இலங்கையில் உள்ள பிற அரசியல் கட்சிகளைப் போன்றே, கூட்டமைப்பு பிரதிநிதிகளும் சீன அரசின் அழைப்பை ஏற்று அந்த நாடு சென்று கட்சி மற்றும் அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடி விட்டு வந்ததாக செய்திகள் தெரிவித்தன.

இலங்கை பிரச்சினை குறித்த சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டில் இருந்து சீனாவின் நிலைப்பாடு எந்தவிதத்திலும் மாறியது இல்லை. மாறாக, இனப் பிரச்சினையை முன்னிறுத்தி, சர்வதேச சமூகம் இலங்கையை அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக மட்டம் தட்டுவதற்கும், அல்லது அந்த நாட்டிற்கு எதிராக தடைகள்; விதிப்பதற்கும் மட்டுமே சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. இன்பிரச்சினையை இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையாக மட்டுமே கருதி அந்த நாட்டில் உள்ள சம்மந்தப்பட்டவர்கள் அது குறித்து பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்க வேண்டும் என்பதே சீனாவின் கருத்தும் கூட.

இத்தகைய நிலைப்பாட்டையே பல தசாப்தங்களாக எடுத்த இந்தியா உட்பட்ட பிற நாடுகள் கடந்த மார்ச் மாதம் ஜெனிவா வாக்கெடுப்பில் இலங்கை அரசிற்கு எதிரான நிலை எடுத்தது. அந்த சமயத்தில் வாக்களிக்கும் நாடுகளில் சீனா ஒன்றாக இருக்கவில்லை என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அது மட்டும் அல்ல, வல்லரசு நாடாக உலக அளவில் தலையெடுத்து வரும் சீனா அவ்வாறு தன்னை பிற நாடுகளும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கும் போது அதற்கான அடிப்படை தர்மங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தே உள்ளது.

இது எப்படி என்றாலும், கூட்டமைப்பு மற்றும் தமிழ் சமூகத்தின் உள்ளே தோன்றி வரும் இடைவெளியும் பிரிவுகளும் கவலை அளிக்க கூடியவையே. இலங்கை அரசின் சில நீக்கு போக்குகள் அவ்வப்போது கவசமாக இருந்து கூட்டமைப்பு சிதறி விடாமல் பாதுகாத்து வருகின்றது என்றே சொல்லத் தோன்றுகிறது. அதுபோன்றே இனப்பிரச்சினை குறித்த தெளிவான கருத்துகள் கொண்ட கூட்டமைப்பும் அதற்கான தீர்வு குறித்து இன்னமும் தெளிவான முடிவுகளை மட்டுமே எடுத்து வருகிறது என்று கூறிவிடமுடியாது.

அடுத்தடுத்து வந்துள்ள இலங்கை அரசு தலைமைகள் போன்றே, தமிழ் மிதவாத அரசியல் தலைமைகளும் எல்லா தரப்பினரையும் அணைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணத்தில், யாரையும் அணைத்துச் செல்ல முடியாத நடுநிலை போக்கை எடுத்து வந்துள்ளன. அதனால் மட்டுமே எந்தவித தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியாமல், போராளிகளின் ஒட்டு குழுக்களாக அரசியல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வந்துள்ளன. இந்த நிலைமை மாறவேண்டும். காரணம், இத்தகைய எண்ணப்போக்கே கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம். அவர்களது கூற்று உண்மையானதோ இல்லையோ, அவர்களது சந்தேகங்களுக்கு கடந்த காலம் சான்றாக அமைந்து விட்டது வருந்த தக்க விடயம்!

இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு இரு தரப்பினருமே அடுத்தவரின் நம்பிக்கையை பெறுவதற்கு உழைக்க வேண்டும். இதில் எந்த ஒரு தரப்பினரையும் மட்டுமே குறை கூறுவது தவறு. அது மட்டுமல்ல... அதனால், ஆவதற்கு ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.

  Comments - 0

  • jeyarajah Tuesday, 23 October 2012 08:19 AM

    ஆயுதம் தவிர வேறு வழி இருக்கா.?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .