2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஆசியா பவுண்டேசனின் சிட்டிசன் ரிபோர்ட் கார்ட் தயாரிப்பு வெற்றியளிக்குமா?

Super User   / 2012 ஒக்டோபர் 23 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

•    றிப்தி அலி

அரசாங்கம் என்பது ஜனநாயக ரீதியாக மக்களினால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படுவர். இந்த அமைப்பு பல மட்டங்களில் காணப்படுகின்றன. அதாவது மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்ற ரீதியில் காணப்படும். அடிமட்ட அமைப்பான உள்ளூராட்சி மன்றங்களினுள் மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றன.

இந்த அனைத்து அமைப்புக்களும் மக்களுக்கு தேவையான சேவைகளை மேற்கொள்வதற்காகவே ஸ்தாபிக்கப்படுகின்றன. இதன் ஊடாக பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு, கல்வி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சேவைகள் அனைத்தும் மக்கள் பிரதிநிதிகளாக செயற்படும் ஆட்சியாளர்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் மக்களின் பங்குபற்றல் மிக குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. எவ்வாறாயினும் இந்த சேவைகளை மேற்கொள்ளும் போது பொறுப்புடமை என்பது குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.

அனைத்து வகையான பொது சேவைகளிற்கும் தேவையான நிதியினை பொதுமக்கள் வரி என்ற பொறி முறையில் நேரடியாகவும் மறைமுகமாவும் வழங்குகின்றனர். இந்த வரியே அனைத்து வகையான அரசாங்கங்களினதும் பிரதான வருமானமாகும்.

எனினும் பொதுமக்களின் நிதியின் ஊடாக ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளிலும் பொறுப்புடமை பேணப்படுவதில்லை. அதாவது மக்களின் பணம் மக்களுக்கு எவ்வாறு செலவு செய்யடுகின்றது என்பதை மக்களுக்கு காட்டுவதே பொறுப்புடமை என இங்கு குறிப்பிடப்படுகின்றது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தினை தங்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் எவ்வாறு செலவு செய்கின்றன என்பதை அறிய முடியும். சேவைகளை அரசாங்கள் மேற்கொள்ளும்போது ஏதாவது ஊழல்கள் இடம்பெறுகின்றனவா என்பதை அறிய முடியும்.

அத்துடன் குறித்த சேவையில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லாவிடின் தங்களின் கருத்துக்களை தெரிவித்து சேவைகளை சிறந்த முறையில் பெற முடியும். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அரசாங்கங்களின் செயற்பாடுகளில் மக்களும் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

எனினும் அரசாங்கங்கள் இவ்வாறு மக்களுடன் இணைந்து செயற்படுவது மிக குறைவாகும். இதன் காரணமாக பொறுப்புடமை பேணப்படுவதில்லை. எவ்வாறாயினும் மக்களின் பங்குபற்றுதலுடனான பொறுப்புடமை செயற்பாட்டை மிக இலகுவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்வது சுலபமான காரியமொன்றல்ல. எனினும் இதனை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

அதாவது சந்தை கட்டிட தொகுதியின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்தை எடுப்பதற்காக இரவு நேரத்தில் செல்லும் போது 100,000 ரூபா பணத்தை காண்கிறீர்கள். குறித்த பணத்தை நீங்கள் எடுப்பதை யாராலும் அவதானிக்க முடியாது.

அப்படியிருந்தால் பெரும்பான்மையானவர்கள் குறித்த பணத்தினை ரகசியமாக எடுப்பார்கள். அதேவேளை, குறித்த வாகன தரிப்பிடத்தில் வீடியோ கமெரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் அனைவரும் குறித்த பணத்தை உரிய அதிகாரிகளிடம் கொடுத்து பாராட்டை பெறவே முயல்வர்.

இதனை ஒத்த செயற்பாடுகளே இலங்கையிலுள்ள அரச நிறுங்களில் செயற்படுகின்றனர். குறித்த ஒரு செயற்பாட்டில் பொதுமக்கள் அவதானமாக இருந்தால் ஊழல் மோசடிகள் இடம்பெறாமல் இருக்கும். அதேநேரம் பொதுமக்களின் பங்குபற்றல் குறைவாக காணப்படின் ஊழல் மோசடிகள் அதிகம் இடம்பெறும்.

சிட்டிசன் ரிபோர்ட் கார்ட்

இதற்காக ஆசியா பவுண்டேசன் புதிய செயற்றிட்டமொன்றை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. சிட்டிசன் றிபோர்ட் கார்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிரஜைகள் அறிக்கை அட்டை செயற்திட்டத்தினையே முதன் முதலில் ஆசியா பவுண்டேசன் இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்வது பாரிய விடயமொன்றென்பதால் உள்ளூர் மட்டங்களிலுள்ள ஜனநாயக ரீதியான அரச நிறுவனங்களான உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து ஆசியா பவுண்டேசன் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய நுவரெலியா மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் இந்த சிட்டிசன் றிபோர்ட் கார்ட் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கடந்த மாதம் ஆசியா பவுண்டேசனினால் வெளியிடப்பட்டடுள்ளது.

இந்த அறிக்கை ஆசியா பவுண்டேசன் நிதியுதவியுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக கொள்கை ஆய்விற்கான அறிக்கை நிலையம் மற்றும் சிறப்பு தன்மையான இந்திய பிராக் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரிலுள்ள உள்நாட்டலுவல்கள் நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

சிட்டிசன் றிபோர்ட் கார்ட் பரவலாக அனைவராலும் ஏற்கப்பட்ட ஒரு சமூக பொறுப்புடமை கருவியாகும். இந்த செயற்றிட்டம் முதன் முதலில் 1991ஆம் ஆண்டு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை ஒத்த அமைப்பாகிய பெங்களூர் உள்ளூராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை சிட்டிசன் ரிபோர்ட் கார்ட் செயற்றிட்டத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்தே ஆசியா பவுண்டேசன் இலங்கையில் இந்த சிடிசன் றிபோர்ட் கார்ட் அறிக்கையினை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம் அரச நிறுவனங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை ரீதியிலான முன்னேற்றங்களின் பின்னூட்டலை அறிவதற்கான சாதனமாகும்.

இந்த அறிக்கை இலகுவில் தயாரிக்கப்படும் ஒன்றல்ல. இதற்காக வேண்டி ஆசியா பவுண்டேசன் பல மில்லியன் ரூபா பணத்தினை செலவளித்துள்ளது. அத்துடன் இந்த அறிக்கை தயாரிப்பிற்கு பல மாதங்கள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது பயன்பாட்டாளர்களான பொதுமக்களின் கருத்துக்கள், அனுபவம், அரச சேவையர்களின் கருத்துக்கள், அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை வைத்து தயாரிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையின் மூலம் குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் கொள்கைகள், தந்திரோபாயங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை ஆராய்க்கின்றன. அத்துடன் அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் முன்வைக்கின்றன.

பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் தயாரிக்கப்படுகின்ற இந்த அறிக்கையில் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் காணப்பட்டாலும் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன்னிலையிலேயே வெளியீடு செய்யப்படுகின்றது.

இந்த சிட்டிசன் ரிபோர்ட் கார்ட் அண்மையில் நுவரெலியா மாநகர சபையில் வெளியிடப்பட்டது. இதன்போது இந்த தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களினால் மாநகர சபையை வினைத்திறனுடன் மேற்கொள்வது தொடர்பில் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

இதே போன்ற அறிக்கையினை கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாநகர சபை பிரதேசங்களில் தயாரிப்பதற்கு ஆசியா பவுண்டேசன் தீர்மானித்துள்ளது. அதாவது சமூக பொறுப்புடமை செயற்பாடு நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இடம்பெற வேண்டும் என்ற நோக்கிலேயே கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாநகர சபைகளுக்கு ஆசியா பவுண்டேசனின் சிட்டிசன் ரிபோர்ட் கார்ட் தயாரிப்பு பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிட்டிசன் ரிபோர்ட் கார்ட் தயாரிப்பு செயற்பாட்டினை எதிர்காலத்தில் நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது என ஆசியா பவுண்டேசன் திட்டமிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் பொறுப்புடமை செயற்பாட்டை ஏற்படுத்துவதற்காக அடி மட்ட அரச அமைப்பான உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புடமை செயற்பாட்டை மேற்படுத்த ஆசியா பவுண்டேசனினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடு வெற்றியளிக்குமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

  Comments - 0

  • safee ur rahman Tuesday, 23 October 2012 04:35 PM

    இது நாய் வாலை நிமிர்த்தும் கதை...

    Reply : 0       0

    P. Mahadevah Monday, 29 October 2012 06:41 AM

    இந்த அட்டையின் தொழிற்பாடு எவ்வாறு உள்ளது அல்லது அது எவ்வாறு செயற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் கருத்துக் கூற முடியாது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .