Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -உறுதியான வெற்றியைப் பெற்று, தாமே தமிழ் மக்களின் மெய்யான பிரதிநிதிகள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான சவால்களை எதிர்கொண்டிருந்தது.
இதற்கு முன்னைய தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈ.பி.டீ.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புத் தான் கடுமையான சவாலாக இருந்து வந்திருந்தது.
அது, தமிழ் மக்களின் உணர்வு ரீதியான ஆதரவுக்கும் பேரினவாத சக்திகள் மற்றும் அதற்குச் சோரம்போகும் இணக்க அரசியலுக்கும் இடையிலான போட்டியாக இருந்தது.
ஆனால் இம்முறை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அத்தகைய நிலையில் இருந்து வேறுபட்டதொரு தளத்தில் தேர்தலை எதிர்கொண்டது.
தமிழ்த் தேசியத் தளத்தில் நின்று அரசியல் செய்யும் கூட்டமைப்புக்கு சவாலாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பன அதே தளத்தில் நின்று போட்டியிட்டன.
அதைவிட, முன்னைய தேர்தல்களில் எல்லாம், கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்கள், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளினால் தான் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் இம்முறை, தமிழ்த் தேசியம் பேசும் சில தரப்பினரும், புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினரும், கூட்டமைப்புக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்துப் பிரசாரங்களை மேற்கொண்டனர்.
இந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தேர்தலில் கடுமையான போட்டியும் இருந்தது, அழுத்தங்களும் நெருக்கடிகளும் இருந்தன. கிட்டத்தட்ட இதனை ஒரு சகோதரச் சண்டை என்றே கூறலாம்.
இருந்தாலும், தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட ஒரு கடுமையான பிரசார யுத்தத்தைச் சமாளித்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
20 ஆசனங்களைக் கைப்பற்றுவது என்ற மிகக்கடினமான இலக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தாலும், 16 ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பது அதற்கு மிகப்பெரிய வெற்றி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
யாழ்ப்பாணத்தில் 6 வாக்குகளால் ஓர் ஆசனத்தைக் கூட்டமைப்பு இழந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், கடந்த தேர்தலை விடவும், அதிகளவு வாக்குகள், ஆசனங்களைப் பெற்று, கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் அடைந்திருக்கும் வெற்றியை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்தத் தேர்தல் வெற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் பலத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
ஆனாலும், இனிமேல் தான் அதற்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்பதே உண்மை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவுக்கு ஒற்றுமையுடன் செயற்படப் போகிறது - எந்தளவுக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பே தமிழ் மக்களிடம் இப்போது தோன்றியிருக்கிறது.
இந்தத் தேர்தலில், 20 ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், அதனூடே கிடைக்கும் பேரம் பேசும் பலத்தைக் கொண்டு, தமிழர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை இரா.சம்பந்தன் கொடுத்திருந்தார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கும் ஆற்றலைப் பெறுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை.
முதலில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும்- அவர்களுக்கு உரிமைகளை வழங்கும் தீர்வாக அமைய வேண்டும். அது தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் ஒன்றாக இருக்கவேண்டும்.
இரண்டாவது, தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் தீர்வு ஒன்றை நோக்கி சிங்கள அரசியல் தலைமைகள் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
இந்த இரண்டு புள்ளிகளின் சந்திப்பில் தான், தமிழர் பிரச்சினைக்கான நிலையான தீர்வு ஏற்படும். இதுவரையில் இந்த இரண்டு புள்ளிகளின் சந்திப்பு எந்தவொரு கட்டத்திலும் சாத்தியமாகவில்லை.
இதனைச் சாத்தியமாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது என்றாலும், அது எப்படி என்பது தான் சிக்கலான விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கொழும்பு அரசியலில் தீர்மானகரமான சக்தியாக இருந்தால் தான் அதனைச் சாதிக்க முடியும்.
ஆனால், இந்தத் தேர்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அத்தகைய தீர்மானகரமான சக்தியாக உருவாக்கியுள்ளதா என்ற கேள்வி இருக்கிறது.
இந்தப் பத்தியை எழுதும் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
106 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐ.தே.க. ஆட்சியமைக்கப் போகிறது. முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ள ஆசனமொன்றையும் சேர்த்தால், 107 ஆசனங்கள் அதற்கு உள்ளது.
ஆனால், அறுதிப் பெரும்பான்மை பலத்துக்கு 113 ஆசனங்கள் தேவை. அதற்கு மேலும் ஆறு ஆசனங்களைப் பெற வேண்டும்.
கூட்டமைப்பானது வெளியில் இருந்து அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தாலும், தேசிய அரசாங்கம் ஒன்றில் பங்கேற்கப் போவதில்லை.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்கள் இந்தத் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நிலை உள்ளது.
இதன் மூலம் அறுதிப் பெரும்பான்மை பெறும் அரசாங்கம் ஒன்றே உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தற்போதைய நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்கான வாய்ப்பு- கூட்டமைப்புக்கு குறைவாகவே இருக்கும். அதற்காக, புதிய அரசாங்கம் கூட்டமைப்புடன் விரோதத்தை வளர்க்கும் எனக் கருத முடியாது.
20ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட பல சட்டத்திருத்தங்களை புதிய அரசாங்கம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.
அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் புதிய அரசாங்கத்துக்குத் தேவை.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்ஷவின் கை ஓங்கியிருக்கிறது.
எனவே, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு பெறப்பட்டது போல, அங்கிருந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அல்லது ஆதரவைப் பெறலாம் என்று கனவு காணமுடியாது.
இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்படாமல் இருக்கவே ரணில் அரசாங்கம் விரும்பும்.
அதைவிட, மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இப்போது முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு விடவில்லை. மஹிந்த அணியில் கணிசமானோர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
அவர்கள், புதிய அரசாங்கத்தை நிம்மதியாக இருக்கவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆட்சிக் கவிழ்ப்பு என்ற உச்சஅளவுக்குக் கூட அவர்கள் செல்லக் கூடும்.
தேர்தல் முடிவு வெளியானவுடன் மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான மனுஷ நாணயக்கார தெரிவித்த கருத்தை உதாசீனம் செய்ய முடியாது.
ஒரு வருடத்துக்குத் தான் தாங்கள் எதிர்க்கட்சியில் இருப்போம் என்றும், அதற்குப் பின்னர், அரசாங்கத்தைக் கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷ அணியினர், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான எத்தனங்களில் ஈடுபடுவார்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
அறுதிப் பெரும்பான்மை பெறாத ஓர் அரசாங்கம் எதிர்கொள்ளும் எல்லாச் சவால்களையும் புதிய அரசாங்கம் எதிர்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஒரு நித்திய கண்டமாகவே இருக்கலாம். இத்தகைய ஒரு கட்டம் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் வாய்ப்பை அளிக்கக்கூடும்.
அதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசும் அரசியலின் ஊடாகப் பெரியளவில் எதையும் சாதிக்க முடியாது.
ஆனால், தேர்தலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியாக வேண்டிய கடப்பாடு அதற்கு உள்ளது.
இந்தக் கட்டத்தில் கூட்டமைப்புக்கு உள்ள ஒரே நம்பிக்கை, புதிய அரசாங்கம் தீர்வு ஒன்றுக்கான பேச்சுக்களுக்கு செல்ல வேண்டும் என்று சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தங்களைப் பயன்படுத்திக் கொள்வது மட்டும் தான்.
கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் கொடுத்துள்ள ஆணையை மதித்து, அதனுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வு ஒன்றைக்காணும் கடப்பாடு புதிய அரசாங்கத்துக்கு உள்ளது.
அதற்கு வலுவாக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய நிலையில் கூட்டமைப்பு இருக்கிறது. கூட்டமைப்புக்கு மட்டுமன்றி தமிழ் மக்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட இதே ஆணையை தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள்.
எனவே, தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு தரப்புக்கும் கடுமையான அழுத்தங்கள் உள்ளன.
இந்தக் கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்குள் இருக்கும் அக முரண்பாடுகளைக் களைந்து கொண்டு, அரசியல் தீர்வு ஒன்றுக்கான தீவிர முயற்சியில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் அளித்துள்ள ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தளவுக்கு பயன்படுத்திக் கொள்கிறது என்பது மிகவும் முக்கியமான விடயமாக இருக்கும்.
ஏனெனில், அதனை உன்னிப்பாக அவதானித்து தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வை மேற்கொள்வதற்கு தேர்தலில் தோல்வியுற்றவர்கள் காத்திருக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago