2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன-மதத் தேசியவாத அரசியலை எப்படி மாற்றி அமைப்பது?

Johnsan Bastiampillai   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

 

“நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்று சொல்லும் தலைவர்கள் எல்லாம், இலங்கையர் என்ற சிவில் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு எதுவுமே செய்வதில்லை. மாறாக, சிறுபான்மையினர் அதிகாரப் பகிர்வைக்  கோரும்போது மட்டும், மேற்சொன்னதைச் சொல்லிவிட்டு, தேர்தல் என்று வந்துவிட்டால், இன-மதத் தேசியவாதத்திடம் சரணாகதியடைந்து விடுகிறார்கள்.

இலங்கை அரசியலில், இன-மதத் தேசியவாதம் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இலங்கை அரசியலின் மைய உயிரோட்டத்தில் கலந்துவிட்ட இன-மதத் தேசியவாதம், இன்று அரசியலிலிருந்து பிரித்தெடுக்கக் கடினாமான வகையில் இலங்கை அரசியலுடன், இரண்டறக் கலந்துவிட்டது.

இது, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான, ‘நல்லவர்கள்’ சிலரின் நல்லெண்ண முயற்சிகளுக்குக் கூடத் தடையாக உள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் சிறுபான்மை இனங்களை, முக்கியமாக தமிழர்களை, ஓரங்கட்டுவதை நிலைநிறுத்தி, தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சிக்கும் அதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்திருந்தன.

இலங்கையின் தமிழ்த் தேசியமானது, பேராசிரியர் ஏ.ஜே வில்சன் சொல்வதைப் போல, தற்காப்புத் தேசியம்தான். பெரும்பான்மை இனத்தின் இன-மதத் தேசியவாத எழுச்சியிலிருந்தும், அதன் விளைவான சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தமிழர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட தற்காப்புக் கவசம்தான் தமிழ்த் தேசியம். இன்று அது ஆழ ஊன்றி, வேர்விட்டு தழைத்து நிற்கிறது.

இலங்கையில் இன சௌஜன்யத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தமிழ் இளைஞர் ஆயதக் குழுக்கள்தான் பெரும் தடையாக இருக்கின்றன என்ற விமர்சனம், மிக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவந்ததொன்று. ஆனால், 2009இல் விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிப்பட்ட பின்னரும், இன சௌஜன்யத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான உணர்வுள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டனவா என்பது கேள்விக்குறியே!

இன்றும் இலங்கை அரசியலில் இன-மதத் தேசியவாதம் மிகப்பெரியளவில் தலையெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக வன்முறை, பாரபட்சமான சொல்லாட்சியைப் பயன்படுத்திய பொதுபல சேனா போன்ற சிங்கள-பௌத்த தேசியவாத இயக்கங்களின் மீள்எழுச்சியில் இது மிகத்தௌிவாகவே பிரதிபலித்தது.

சிறுபான்மை சமூகத்தினரிடையே அச்சம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலை உருவாக்கிய இந்த நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். ஆகவே, இன சௌஜன்யத்தைக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கமானது விரும்பியிருந்தால், அதனால் ஆக்கபூர்வமான, உண்மையான, விளைபயனைத் தரக்கூடியதோர் இன-நல்லிணக்க மேம்பாட்டுத்திட்டத்தை முன்வைத்து, அதைச் செயற்றிறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதனை இன்றுவரை எந்த அரசாங்கமும், இதயசுத்தியுடன் முயலவில்லை என்பதுதான் கவலைக்குரியது.

இலங்கை அரசியலில் இனவாதப்பிரச்சினைக்குத் தீர்வு காண, ஒரு விரிவான அணுகுமுறை தேவையாகிறது. இந்த அணுகுமுறையானது, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல், கலாசாரம் மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதலை வளர்ப்பது மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துதலினூடாக சந்தேகமற்ற, புரிந்துணர்வுள்ள இலங்கை பிரஜைகள் சமூகத்தை கட்டமைக்கும் வகையில் அமைய வேண்டும்.

வெவ்வேறு இன மற்றும் மத குழுக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும் பதட்டங்களைக் குறைப்பதற்கும் உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் அவசியம். நடுநிலை மற்றும் மரியாதைக்குரிய மூன்றாம் தரப்பினரால் அர்த்தமுள்ள மற்றும் உள்ளடக்கிய உரையாடலை எளிதாக்குவதன் மூலம் இதை அடைய முடியும். இத்தகைய உரையாடல் அனைத்துத் தரப்பினரும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தவும் பொதுவான புரிதலை நோக்கிச் செய‌்படவும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க உதவும்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளை மேம்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவது இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது. நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகளாகவும் இருப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும்.

நிறுவனங்கள் வினைத்திறன் மற்றும் விளைதிறன் உள்ளவையான இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த போதுமான வளங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். அரச நிறுவனங்களிலிருந்து இனவாதத்தையும் இனவெறியையும் இன-மதப் பாகுபாடுகளையும் இல்லாமல் ஒழிப்பது மிகப்பெரிய சாதனையாகவே அமையும்.

இலங்கையில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் மிகவும் முக்கியமானது. இனங்களுக்கு இடையிலான மற்றும் மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதில் இளைஞர்கள் கணிசமான பங்கை வகித்துள்ளனர். இளைஞர்கள் தலைமையிலான முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், அமைதியைக் கட்டியெழுப்பும் செயல்முறைக்கு அவர்கள் பங்களிக்கத் தேவையான வளங்கள், வாய்ப்புகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்த தலைமுறை, கடந்த தலைமுறையின் வன்மங்களை, இனவாதத்தை, காயங்களை, வடுக்களை முன்கொண்டு செல்லாது, இனவாதத்தையும், இன-மதத் தேசியத்தையும் கடந்த ஓர் அரசியலை முன்னெடுப்பதற்கு தேவையான உற்சாகத்தையும், உந்துதலையும் வழங்கவேண்டும்.

இலங்கையில் அமைதி, ஸ்திரத்தன்மை ​ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்.

கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்புகளை அணுகுவதற்கு அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்புகளை வழங்குவது இதில் அடங்கும். வறுமை,  சமத்துவம் இன்மைக்கான அடிப்படைக் காரணங்களான நில உரிமைகள், வளங்களுக்கான அணுகல் போன்றவை மிகவும் உள்ளடக்கிய மற்றும் சம வாய்ப்புகள் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் அக்கறைகொண்டு செயற்படவேண்டும்.

வேறுபட்ட மக்கள்களின் கலாசாரம் மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதலை வளர்ப்பது அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய அங்கமாகும். வெவ்வேறு இன மற்றும் மத குழுக்களிடையே உரையாடல், புரிதலை ஊக்குவிக்கும் முன்முயற்சிகள் மூலம் இதை அடைய முடியும்.

இத்தகைய முன்முயற்சிகள் மக்கள் தங்கள் கலாசாரங்கள் மற்றும் மரபுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும் ஒன்றிணைக்க முடியும். இது அர்த்தமுள்ள வகையில் செய்யப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்கான ஆரம்பப்புள்ளி அனைவரும் சமம் என்பதிலிருந்தே தொடங்கும். ஆகவே, அதனை முதலில் உறுதிசெய்ய வேண்டும்.

இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பல்வேறு சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் செயல்களின் மூலம் நம்பிக்கையை உருவாக்க முடியும்.

மக்கள் தங்கள் கதைகள், அனுபவங்கள், கவலைகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய இடங்களை உருவாக்குவதும், பொதுவான நிலையைக் கண்டறிய அவர்கள் ஒன்றாகச் செயல்படுவதும் இதில் அடங்கும். ஒரு சமூகத்தின் நினைவேந்தும் உரிமையைத் தட்டிப்பறித்தெல்லாம் இன-சௌஜன்யத்தை வளர்க்க முடியாது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வெவ்வேறு இன மற்றும் மதக் குழுக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை அங்கிகரிப்பதும் ஏற்றுக்கொள்வதும் இலங்கையில் சமாதானம் மற்றும் இன-சௌஜன்யத்தை மேம்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். இந்த வேறுபாடுகளை அங்கிகரிப்பது மற்றும் ஏற்றுக்கொள்வது என்பது பாகுபாடு அல்லது துன்புறுத்தலுக்கு அஞ்சாமல் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கலாசாரம், மதம், மொழியை கடைப்பிடிக்க உரிமை உண்டு என்பதை அங்கிகரிப்பதிலிருந்து தொடங்கும்.

சம உரிமைகள் என்பது ஒரு ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடாகும், மேலும், அவை இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்ற உண்மையை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். அனைத்துக் குடிமக்களுக்கும் வாய்ப்புகள் சமமாக அமைய வேண்டும்; மற்றும், நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் முழுமையாகப் பங்கேற்க வழி சமைக்க வேண்டும். சட்டங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியதாகவும், பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இருப்பதையும், மக்கள் தங்கள் இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், வேறுபாடுகளை அங்கிகரிப்பதும் ஏற்றுக்கொள்வதும் வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு முக்கியமானதாகும்.

வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், மதித்து நடப்பதன் மூலமும், பொதுவான நிலையைக் கண்டறியவும் வலுவான உறவுகளை உருவாக்கவும் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட முடியும்.

இந்தத் தீவு, இன-மத ரீதியில் தொடர்ந்தும் பிளவுபட்டிராது, ஒற்றை சிவில் தேசமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று அரசாங்கம் விரும்பினால், அதற்குக் குறைந்தபட்சமாகச் செய்ய வேண்டிய சில விடயங்கள் மேலே கூறப்பட்டுள்ளன. எதுவுமே செய்யாமல், ‘நாம் அனைவரும் இலங்கையர்கள்; ஒரு தாய் மக்கள்” என்று வாய் வார்த்தை மட்டும் பேசித்திரிவதில் அர்த்தமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .