2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இரு துருவங்கள்?

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் ஒன்றிணைந்து செயற்படப் போகின்றார்கள் என்ற அநாமேதயத் தகவல் ஒன்று கடந்த இரு தினங்களாக இணையத்தளங்களில் உலா வருகின்றது. 

இது பற்றி இரு தரப்பிலும் விசாரித்துப் பார்த்தால் 'அப்படி ஒன்றுமில்லை' என்ற ஒரு பதில்தான் வருகின்றது. இருப்பினும் அரசியலில் எதுவும் நடப்பது சகஜமானது என்ற அடிப்படையில் அதாவுல்லா - ஹக்கீம் இணைவை நோக்க வேண்டியுமிருக்கின்றது.  

அதாவுல்லாவும் ஹக்கீமும் சேர்ந்து இயங்குதல் என்பது இலங்கை முஸ்லிம் அரசியலில் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு மாறுதல் என்றாலும் கூட, இரு துருவங்களாக மாறியிருக்கும் இவ்விருவரும் ஒரே கட்சியின் கீழ் செயற்படுதல் என்பது அவ்வளவு சுலபமாக நடந்து விடக் கூடியதல்ல. ஏனெனில், இவர்கள் இருவரும் இணைவது தனியே இரு நபர்கள் சம்பந்தபட்டதல்ல. 

மாறாக இரு கட்சிகளுடன் தொடர்புபட்டதாகும். இவர்கள் இரண்டு பேரும் இரு காங்கிரஸ்களின் தலைவர்கள். இரண்டு பேரும் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இரு கட்சிகளுக்கும் மாகாண சபைகளில் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், உள்ளூராட்சி மன்றங்களையும் தம்வசம் வைத்திருந்தன. 

அதாவுல்லாவுடன் சேர்ந்து இயங்கவேண்டிய தேவை ஹக்கீமுக்கோ அல்லது ஹக்கீமுடன் கூட்டுச் சேர வேண்டிய இக்கட்டான நிலை அதாவுல்லாவுக்கோ இன்னும் ஏற்படவில்லை. 

இவர்கள் இருவரும் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களே. ஆனால், அக்கட்சிக்கு சிரேஷ்ட உறுப்பினர் அதாவுல்லா என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த தலைவர் அஷ்ரஃபுடன் இணைந்து அரசியல் செய்வதற்காக அக்கரைப்பற்றை சேர்ந்த ஒரு பேராளியாக அதாவுல்லா, முஸ்லிம் காங்கிரஸில் 1980களின் பிற்பகுதியில் இணைந்து கொண்டார். 

அதன்பின்னர், அஷ்ரஃபின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அதாவுல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் மு.காவுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்த அக்கட்சியின் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸதீனுக்கு, ஐ.தே.கட்சியால் தேசியப் பட்டியல் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. எனவே, இங்கு அரசியல் சமப்படுத்தலை மேற்கொள்ளும் பொருட்டு சுதந்திரக் கட்சியானது அதாவுல்லாவுக்கு தேசியப் பட்டியல் வழங்கியது.  

அப்போதிலிருந்து, கடந்த ஆட்சிக்காலம் வரைக்கும் அதாவுல்லா பிரதி அமைச்சராக, அமைச்சராக பதவி வகித்தார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு பதவியைக் கொண்டும் மக்களுக்கு அதாவுல்லா கணிசமான சேவையை ஆற்றியிருக்கின்றார்.

 தனது சொந்த ஊருக்குள் அவருடைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டது என ஏனைய பிரதேச மக்கள் அங்கலாய்த்துக் கொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவாகவும் அவரது துதிபாடுபவராகவும் இருந்தமையே கடந்த தேர்தலில் அதாவுல்லா தோல்வி அடைவதற்கு அடிப்படைக் காரணமாயிற்று. 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பிற்பாடும், பிரதமர் ரணிலை விமர்சித்துக் கொண்டும் மஹிந்தவின் சால்வையைப் பிடித்துக் கொண்டும் வெற்றிலையில் போட்டியிட்டதால் அதாவுல்லா - கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 

மறுபுறத்தில், ரவூப் ஹக்கீம், அதாவுல்லாவுக்குப் பின்னர்தான், அதாவது 1990களிலேயே முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால், இவர் அடிப்படையில் ஒரு போராளி அல்ல. தலைவர் அஷ்ரஃபிடம் கனிஷ்ட சட்டப் பயிலுனராக இணைந்து கொண்டார். அதன்பின்னர் தலைவரின் கூட்டக் குறிப்புக்களை எழுதும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அச்சமயத்தில் கட்சியின் செயலாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதால் அதற்குப் பொருத்தமானவர் என்று தலைவர் அஷ்ர‡பினால் இனங்காணப்பட்ட ஹக்கீம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையும் அவருக்கு வழங்கப்பட்டது. 

மு.கா. ஸ்தாபகத் தலைவர் 2000ஆம் ஆண்டு விமான விபத்தில் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்ற பிரச்சினை மு.கா.வின் உயர் பீட உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அரசியலில் முன்னனுபவம் எதுவுமற்ற, தலைவரின் பாரியார் பேரியல் அஷ்ரஃபும் ஒருசில வருட அனுபவத்தைக் கொண்டிருந்த அப்துல் ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸின் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். 

எவ்வாறிருப்பினும் இணைத்தலைமை சரிப்பட்டு வராது என்று கருதிய மு.கா.வின் முக்கியஸ்தர்கள் பலர் பேரியல் அஷ்ரஃபை நிராகரித்து விட்டு ரவூப் ஹக்கீமை தனித் தலைமையாக பிரகடனம் செய்தார்கள். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த அதிரடி நிகழ்வில் ஹக்கீமை தலைவராக பிரகடனம் செய்த முக்கியமானவர்களுள் அதாவுல்லாவும் ஒருவர். அதாவது அதவுல்லாவும், ரிஷாட் பதியுதீனும், அமீர் அலியும் மற்றும் மு.கா. தலைவரை இன்று விமர்சிக்கும் பலரும் அன்று ஹக்கீமை அங்கிகரித்தவர்களே என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இருப்பினும், மு.காவுக்கு தலைமை தாங்கும் தகுதி ஹக்கீமுக்கு இல்லை என்றும் அவரின் கீழ் செயற்பட முடியாது என்று கருதியும் கட்டம் கட்டமாக மு.கா.வின் மூத்த உறுப்பினர்கள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறினர். இதில் இரண்டாவது கட்டத்தில் வெளியேறியவர்தான் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா. அதன்பிறகு அவர் தேசிய காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து அரசியல் செய்தார். அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தார்.

தேர்தல் மேடைகளில் ஹக்கீமை வசைபாடுவதே அதாவுல்லாவுக்கு வேலையாக இருந்தது. மறுபக்கத்தில் அதாவுல்லாவை விமர்சிப்பதே ஹக்கீமுக்கு கருப்பொருளாக இருந்தது என்பதற்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருமே சாட்சி. ஆளுக்காள் எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டு தமது பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களை விசுவாசிக்கின்ற ஆதரவாளர்களும் பகைமை பாராட்டிக் கொண்டார்கள். பெரிய கட்சி என்ற வகையில் கடந்த 15 வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதேபோல் மறைக்க முடியாத சரிவுகளையும் உடைவுகளையும் சந்தித்திருக்கின்றது. ஒரு புதிய கட்சியாக இருந்தாலும் தனியொரு அரசியல்வாதியின் காரணமாக, மஹிந்த அரசாங்கத்தில் தேசிய காங்கிரஸ் செல்வாக்குப் பெற்றிருந்தது. 

பிரதேச, மாகாண சபைகளுக்கும் தனது அரசியலை விஸ்தரித்திருந்தது. ஆனால், அண்மைக்காலமாக அக்கட்சி மிகவும் இறங்கு முகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. கட்சி ஒன்று இருக்கின்றதா என்பதற்கான அரசியல் வெளிப்படுத்தல்களையும் காணவில்லை. 

கடைசியில், கட்சித் தலைவரான அதாவுல்லாவுக்கே தனது நாடாளுமன்ற உறுப்புரிமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றத்துக்;கு ஏற்றால்போல் தன்னையும் மாற்றிக் கொள்ளாத அவரது தலைக்கனம் இன்று அதிகார இழப்புக்கு வழிவகுத்திருக்கின்றது. 

கடந்த தேர்தலில் மு.கா. தலைவர் ஹக்கீம் - கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டதால் அமோக வெற்றி பெற்றார். மு.கா.வில் தனித்து கண்டியில் போட்டியிட்டால் கிழக்கில் வெல்வது போல் கண்டியில் வெல்ல முடியாது என்பதை அறிந்துணர்ந்த அவர், மு.கா. கட்சி நாடெங்கும் தனித்தும் இணைந்தும்; போட்டியிடும் முடிவை எடுத்தார்.

இத்தேர்தலில் ஹக்கீம் அணியினருக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோசம், அதாவுல்லா தோற்கடிக்கப்பட்டதே என்றால் மிகையில்லை. 

இப்போது ரவூப் ஹக்கீம் அமைச்சராக பதவி வகிக்கின்றார். தோற்கடிக்கப்பட்ட ஏ.எல்.எம். அதாவுல்லா, முன்னாள் அமைச்சர் என்ற அடைமொழியோடு ஓய்வெடுக்கின்றார். இந்த நிலையிலேயே மு.கா.வில் அதாவுல்லா இணைந்து கொள்ளவுள்ளதாக புதின (கொசிப்) தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. 

அதாவுல்லா என்பவர் தனியான ஓர் அரசியல்வாதியல்ல. அவர் ஒரு கட்சியின் தலைவர். 15 வருடங்களாக வகித்த நாடாளுமன்ற உறுப்புரிமை இம்முறை அவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும் தமது தேசிய காங்கிரஸ் கட்சி தற்போதும் அரசியல் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. அக்கட்சிக்கு மாகாண சபை உறுப்புரிமை இருக்கின்றது. காலாவதியான உள்ளூராட்சி சபைகளில் அக்கட்சியின் உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். அது மட்டுமன்றி விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் களமிறங்கி, இழந்த கௌரவத்தை மீள பெற்றுக்கொள்ள அக்கட்சி முயற்சிக்கின்றது. இவ்வாறிருக்கையில் மு.காவுடன் அதாவுல்லா இணைந்தால் தேசிய காங்கிரஸ் இல்லாமல் போய்விடும். இந்தக் கட்டத்தில் அக்கட்சித் தலைமை முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்வது உடனடியாக நடக்கக் கூடியதல்ல. 

அதேவேளை, அதாவுல்லாவுக்கு ஹக்கீமைப் பற்றி தெரியும். எப்படி அதாவுல்லா தனக்குச் சமமான இன்னுமொரு அரசியல்வாதி உருவாவதை விரும்பவில்லையோ, அதுபோலவே ஹக்கீமும் விரும்பமாட்டார் என்பது அதாவுல்லாவுக்கு தெரியும். எனவே, தனக்கு உரிய இடம் கிடைக்காத ஓர் இடத்தில் வலியப் போய் ஒட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை அதாவுல்லாவுக்கு இன்னும் ஏற்படவில்லை. 

தேசிய காங்கிரஸோ அதாவுல்லாவோ முஸ்லிம் காங்கிரஸுடன் அல்லது ஹக்கீமுடன் இணைவதால் தேசிய காங்கிரஸ் என்ற கட்சிக்கு உடனடியாக நன்மைகள் எதுவும் கிடைக்கமாட்டாது. அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மு.காவுடன் சேர்வதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டு பின்னர் கைவிட்டார் என்பது உண்மையே என்றாலும், அதாவுல்லா இறங்கி வரமாட்டார் என்பது பொதுவான கணிப்பு. 

அவ்வாறே மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அதாவுல்லாவை இணைக்க வேண்டிய தேவை இப்போதில்லை. செல்வாக்கிழந்துள்ள அவரை இணைப்பதால் மு.காவுக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிடைக்கப் போவதும் இல்லை. எனவே அதாவுல்லாவை தோற்கடித்து அவரது அரசியல் செயற்பாட்டை முடக்கியதே போதும் என்று ஹக்கீம் நினைப்பார். மீண்டும் தலைவலியை உள்ளே எடுப்பதை அவர் விரும்பமாட்டார். 

மு.காவுக்குள் அதாவுல்லா வந்துவிட்டால் தமது கதிரை ஆட்டங்காணச் செய்யத் தொடங்குவார் என்பது மு.கா. தலைமைக்கு தெரியாததல்ல. இன்னுமொன்று, தேசிய காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினரை கூட இணைத்துக் கொள்வதை விரும்பாத மு.கா.வின் உறுப்பினர்கள் சிலர் அதாவுல்லா உள்ளே வருவதற்கு நிச்சயம் தடைவிதிப்பர். தம்மை விட செல்வாக்குள்ள ஒருவர் கட்சிக்குள் வருவதை இவ்வாறானவர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பதே உண்மை.

அதாவுல்லாவும் ஹக்கீமும் ஒருவருக்கொருவர் எதிரிபோல காட்டிக் கொண்டாலும், மேடைகளில் ஆளுக்காள் கழுவி ஊற்றினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அந்தளவுக்கு பகைமை பாராட்டிக் கொள்வதில்லை என்பது அடிமட்ட மக்களுக்கு தெரியாத இரகசியம். இப்படியிருக்கையில், தற்போது இருக்கின்ற நிலைமையில் இருவருக்குமிடையிலான வெறுப்புணர்வு குறைவடைந்திருக்கலாம் என்பது உண்மையே. ஆயினும், இருவரும் உடனே இணையப் போகின்றார்கள் என்பதெல்லாம் கற்பனையின் உருவகக் கதையாகவே தோன்றுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X