2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலத்தீன் அமெரிக்க அதிவலது: கெடுபிடிப்போரில் அறுவடை செய்தல்

Johnsan Bastiampillai   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வலது தீவிரவாதத்தின் நிழலில் - 22

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலத்தீன் அமெரிக்க அதிவலதின் இருப்புக்கு 1930களில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிராங்கோவின் எழுச்சி முக்கிய உந்து சக்தியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பாதியில் நவீனமயமாக்கல், அதிவலதுக்கு நெருக்கடியை உருவாக்கியது. 

ஃபிராங்கோவின் எழுச்சியைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், அதிவலது சக்திகள் தங்கள் ஐபீரிய நாயகர்களிடம் இருந்து (ஸ்பெயினின் ஃபிராங்கோ மற்றும் போத்துகல்லின் சலாசர்) தார்மிக மற்றும் நிதிரீதியான ஆதரவைப் பெற்றனர். 

இரண்டாம் உலகப் போரின் முடிவில், அனைத்து பாசிசத்தையும் நசுக்கியதாக நேச நாடுகள் சொல்லிவந்த போதும், ஸ்பெயினிலும்  போத்துக்கல்லிலும் 1970கள் வரை பாசிச சர்வாதிகாரம் நீடித்தது. அது அதிவலது கத்தோலிக்க அமைப்புக்கான உலகளாவிய மையமாக மாறியது. 

இந்த இரு நாடுகளிலிருந்தும் பழைமைவாத பாதிரியார்கள், கல்வியாளர்கள், வெளியீடுகள், இராஜதந்திரிகள் மற்றும் கண்காட்சிகள் ‘கலாசார பரிமாற்றம்’ என்ற பெயரில் இலத்தீன் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.  அவை அந்நாடுகளில் அதிவலதின் செயற்பாடுகளை ஊக்குவித்தன. 

வாக்குரிமையோ, அரசியல் கட்சிகளோ, மனித உரிமைகளோ இல்லாத ஆரம்பகால நவீன சமுதாயத்தின் ஏக்கம் நிறைந்த பார்வையில் தங்கியிருந்த பிராங்கோயிஸ்ட் கதையாடலானது, நவீன ஜனநாயகத்தின் குழப்பமான கோரிக்கைகளை விரைவில் கைவிடக்கோருவோருக்கு ஸ்பெயினை ஒரு பயனுள்ள குறியீட்டுப் புள்ளியாக மாற்றியது. 

எந்த வகையான அரசியல் ஆட்சியும் ‘கம்யூனிசம்’ அல்லது அதை நோக்கி நகர்த்தக்கூடிய எதையும் விட விரும்பத்தக்கது என்ற பார்வையை பொதுப்புத்தி மனநிலைக்கு அளித்தது. அதேவேளை தேவாலயம், இராணுவம் மற்றும் பிரபுக்களின அதியுயர்நிலை ஆகிய மூன்று நிறுவனத் தூண்கள் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எதுவும் அழிக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை நியாயப்படுத்தியது.   

கெடுபிடிப்போர் காலம் முழுவதும் இலத்தீன் அமெரிக்காவெங்கும் அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்டு பிரதான ஆயுதமாக்கப்பட்டு, அரசியல் வன்முறையைப் பிராந்தியம் முழுவதும் தூண்டியது. பல ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், முறியடிக்கப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவை ஸ்பானிய உள்நாட்டுப் போரின் வலதுசாரி தொன்மங்களை வெளிப்படையாக வரைந்தன. 

உதாரணமாக, குவாத்தமாலாவில் 1954இல், மதகுருமார்கள் விசுவாசிகளை அணிதிரட்டி ஜாகோபோ ஆர்பென்ஸை பதவியை விட்டு விரட்டுவதை ‘மீள்வெற்றிகாணல்’ என்று  அழைத்தனர். பொலிவியாவில், 1959இல், ஸ்பெயினின் புரட்சிகர அரசாங்கத்தை தூக்கியெறிய முயன்று இறந்தவர்கள் நினைவாக, பொலிவியன் சோசலிஸ்ட் ஃபாலாஞ்சை நிறுவினார் ஆஸ்கார் உன்சாகா டி லா வேகா. 

ஃபிராங்கோ ஆட்சியின் பெண்களின் கீழ்ப்படிதல், பாலினம், பாலியல் இணக்கமின்மையின் கடுமையான அடக்குமுறை ஆகியவை பிரேஸிலில் எதிரொலித்தன, அங்கு இருபது ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி, பாலினம் மற்றும் பாலியல் இணக்கமற்ற தன்மையை சமன் செய்து, கிறிஸ்தவ தார்மிகச் சிதைவை இராணுவ ஆட்சியால் மட்டுமே நிறுத்த முடியும் என்று வாதிட்டது. 

அர்ஜென்டினாவின் இராணுவ சர்வாதிகாரம் 1970 களின் நடுப்பகுதியில் ‘புனிதப் போர்’ என்ற கருத்தை அதிகமாகப் பயன்படுத்தினர். இடதுசாரிகளின் வெகுஜனக் கொலைகளை புனிதப்படுத்த ‘ஜேசுவுக்காக’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்கள், 

அதேநேரத்தில் அண்டை நாடான சிலியில், கத்தோலிக்க புராணங்கள் மற்றும் புகழ்பெற்ற ஹிஸ்பானிக் கலாசாரக் கருத்துகளில் மூழ்கியிருந்த கிரேமலிஸ்டா சிவிலியன் எதிர்ப்பு இயக்கம், சால்வடார் அலெண்டேவின் சோசலிச அரசாங்கத்தை அகற்றுவதில் மையமாக இருந்தது. 

எல்-சால்வடாரில், 1970களின் நடுப்பகுதியில், ஒரு கொலைக் குழுவானது, ஃபாலாஞ் என்ற சுருக்கத்தை உருவாக்குவதற்காக, அதன் முன்னெழுத்துகளைக் கொண்ட அசாத்தியப் பெயரைத் தனக்கு உருவாக்கிக் கொண்டது.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை சித்திரவதை செய்தல், மாணவர்களை விமானத்தில் இருந்து கடலில் வீசுதல், பழங்குடி சமூகங்களை படுகொலை செய்தல் போன்ற பல வழிகளை இந்த அதிவலது ஆட்சிகளும் குழுக்களும் இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் கண்டுபிடித்தன. இவை ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் அழிவு, தேவையான விவசாய சீர்திருத்தங்களை இடைநிறுத்துதல் அல்லது மாற்றியமைத்தல், தேவாலயத்துக்குள் முற்போக்கான போக்குகளுக்கு தண்டனை வழங்குதல், பலவீனமான, திணிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை எதிர்த்துப் போராடக்கூடிய சமூக இயக்கங்களை அகற்றுதல் போன்றவற்றை சாதித்தன. 

இன்றைய மத்திய மற்றும் தென் அமெரிக்கச் சந்தைகளை பிரதான வணிக வாய்ப்புகளாகக் கூறும், சுரண்டும் சர்வதேச முதலீட்டாளர்கள் பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட பழைமைவாத அடக்குமுறைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், இலத்தீன் அமெரிக்கா இன்று உலகின் மிகவும் சமத்துவமற்ற பிராந்தியமாக இருப்பது ஒரு விபத்து அல்ல.

1990களின் இறுதியில் அதிவலது சர்வாதிகார ஆட்சிகளின் சரிவு இலத்தீன் அமெரிக்கா எங்கும் தொடங்கியது. இது இளஞ்சிவப்பு அலை என்று அறியப்பட்டது. சந்தையின் புதிய தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக இது தோற்றம் பெற்றாலும் அது கடந்தகால இரத்தத்தில் நனைந்த பிற்போக்குத்தனமான தசாப்தங்களின் மறுதலிப்பாகவும் இருந்தது. 

இது சிலியின் மைக்கேல் பேச்லெட், பிரேஸிலின் தில்மா ரூசெஃப் போன்ற முன்னாள் சித்திரவதைக்கு ஆளானவர்களின் உயர்வின் அடையாளமாவும் அவர்களை நாட்டின் தலைவர்களாகக் கொண்டு வந்தது. வேரூன்றிய அதிகாரக் கட்டமைப்புகளை அகற்றுவதில் புரிந்து கொள்ளக்கூடிய தோல்விகளை இந்தப் புதிய அரசாங்கங்கள் கண்டபோதும்,  இளஞ்சிவப்பு அலை ஒரு புதிய சகாப்தத்தின் உதயத்தை பரிந்துரைத்தது.

பிரேஸிலின் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவைப் போலவே, புத்துயிர் பெற்ற வெகுஜன அமைப்புகள் தங்கள் தலைவர்களை அரசியல் அதிகாரத்துக்குள் தள்ள முடியும். அர்ஜென்டினா போன்ற சர்வதேச கடன் வழங்குனர்களுக்கு மிகவும் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் தளைகளை தூக்கி எறியலாம். பொலிவியா போன்ற பெரும்பான்மையான பழங்குடி சமூகங்கள், நவீன அரசை பன்முகத்தன்மை கொண்டதாக மறுவரையறை செய்யத் துணிந்த ஒரு பூர்வகுடி ஜனாதிபதியால் ஆளப்படலாம் போன்றவற்றைக் காட்டி நின்றது. 

இந்தக் கட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் தீவிர வலதுசாரிகள் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தபோதிலும், இளஞ்சிவப்பு அலை வீசிய நாடுகள் எதிர்கொண்ட பெருகிய சவால்கள் - பண்டங்களின் விலை வீழ்ச்சி, ஊழல், அமெரிக்க தலையீடு, பிரித்தெடுக்கும் தூண்டுதலின் பிரித்தெடுத்தல் -  வேலைநிறுத்தம் செய்வதற்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. அதன் மூலோபாய நோக்குநிலை எப்போதும் வெற்றியடையவில்லை என்றாலும், அடிப்படையில் அதிவலது பல முயற்சிகளை மேற்கொண்டது. 

எடுத்துக்காட்டாக, வெனிசுலாவின் ஹ்யூகோ சாவேஸூக்கு எதிரான 2002 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்தது ஒரு  பழைமைவாதக் கூட்டணியாகும். அதன் முக்கிய பங்காளியாக அதிவலது இருந்தது ஆச்சரியப்படத்தக்கவொன்றல்ல. 

இளஞ்சிவப்பு அலையின் கலவையான முடிவுகள் பிரதிபலிப்பது யாதெனில், இவ்வலை வீசிய நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையாகும். 

அதேவேளை, இந்த அலை வீசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் புரட்சிகரமானதாகவன்றி  மிகவும் சீர்திருத்தவாதமாக மாறியது. உண்மையிலேயே புரட்சிகரமாக இருந்தது அடிமட்ட அடிப்படை இயக்கங்களாகும். இந்த இயக்கங்கள் காலப்போக்கில் தங்கள் செல்வாக்கை இழந்ததோடு அவர்களின் கோரிக்கைகள் கேட்பாரற்றுப் போயின. 

அதிகாரத்துக்கு ஆட்சியாளர்களைக் கொண்டு வந்த இவ்வியக்கங்கள் கட்சிக் கட்டமைப்புகளில் இருந்தே அந்நியப்பட்டுவிட்டன. இதனால் பிரேஸில், ஹொண்டுராஸ் மற்றும் பராகுவேயில் நடந்த நீதித்துறை சதிகள் உட்பட, வலதுசாரி சவால்களில் இருந்து இளஞ்சிவப்பு அலையில் ஆட்சிக்கு வந்தோர் தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலாமல் போனது. 

அடித்தட்டு மக்கள் இயக்கங்களில் இருந்து அந்நியப்பட்டவையாக குறித்த ஆட்சிகள் மாறியிருந்தன. அடித்தட்டு மக்கள் இயக்கங்கள் உயிர்ப்போடு இருந்திருக்குமாயின் அதிவலதின் சதிகள், ஆட்சிக்கவிழ்ப்புகளை முறியடித்திருக்க இயலும்.  இளஞ்சிவப்பு அலையின் விளைவால்  பெறப்பட்ட சில வெற்றிகள், வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட தொகுதிகளுக்கு அதிகாரமளிப்பதை உள்ளடக்கியது.

லூலாவின் கீழ் பிரேஸிலின் உயர்கல்வி அமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட தீவிரமான உறுதியான செயற்றிட்டங்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கும் பிராந்தியத்தின் அலை ஆகியவை இதற்குச் சான்றாகும். 

1990வரை இலத்தீன் அமெரிக்காவில் அதிவலது மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. கெடுபிடிப்போர் அதற்கு மிகுந்த வாய்ப்பானது. 1990களின் இறுதியில் அதிவலதுக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராக இலத்தின் அமெரிக்க மக்கள் எழுந்தார்கள். அது இளஞ்சிவப்பு அலையானது. ஆனால் 2000இன் இறுதியில் அமெரிக்கா அதிவலதின் துணையோடு திருப்பித் தாக்கியது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .