2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள்

Editorial   / 2017 ஜூன் 20 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.  

 

போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் காணப்படுகின்றன.   

இனம்காணப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, உல்லாசப் பயணிகள் வந்து செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்களேயானால் வடக்கில் இன்று காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம், தொழில்வாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பது உண்மை.   

வடஇலங்கையில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்யக்கூடிய மூன்று அம்சங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட பேராசிரியர் ப. புஸ்பரெட்ணம் கூறுகின்றார். இது தொடர்பாக அவர் கூறும்போது, முதலாவது, இயற்கை வளங்கள்; இ​ரண்டு தொல்லியல் அம்சங்கள்; மூன்று தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்கள் என்கிறார்.  

தென்னிலங்கையில் சுற்றுலா மேம்பாட்டில் இந்த இயற்கை வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல், குடாநாட்டிலும்  இயற்கை வளம் மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுகின்றது. இங்கும் பிற நாட்டவர்களும் தென்னி​லங்கையில் இருந்து வருகின்றவர்களும் பார்க்கக் கூடிய, தரிசிக்கக் கூடிய பல இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் உள்ள கடற்கரைகள் மிக உன்னதமான சுற்றுலாவுக்கு உகந்தவையாகக் காணப்படுகின்றன. 

கசூரினா கடற்கரை, கீரிமலை, வெற்றிலைக்கேணி, முல்லைத்தீவு, சாட்டி போன்ற இடங்களில் உள்ள கடற்கரைகள் பட்டுப்போன்ற வௌ்ளை மணற்பாங்கானவையாகவும் ஆழம்குறைந்த பரந்து விரிந்த அமைப்பைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.  

இந்தக் கடற்கரைகளைத் தவிர, பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பகுதிகள் முக்கிய அம்சங்களாகச் சுற்றுலாவிலே காணப்படுகின்றன.  

கிட்டத்தட்ட 1965 ஆம் ஆண்டளவில் அரசாங்க அதிபராக இருந்த ஸ்ரீகாந்தா, சுண்டிக்குளத்தில் வெற்றிலைக்கேணிக்கு அண்மையில், உலகிலுள்ள பலநாடுகளில் இருந்து மிக அற்புதமான பறவைகள் வந்து செல்வதை அவதானித்து அதை ஒரு பறவைகள் சரணாலயமாக அங்கிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.   

2009 இன் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் முயற்சியால், இந்தச் சரணாலயம் சிறப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டு, வௌிநாட்டவர்கள், தென்னிலங்கை மற்றும் உள்ளூர் மக்கள், இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். மக்களுக்கு வசதியாக தங்குமிட வசதிகள், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள், சிறுவர்கள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அ​ங்கே சேர்க்கப்பட்டு இப்போது ஒரு சர்வதேச தரத்துடனான சரணாலயமாகக் காணப்படுகின்றது 

இதைத் தவிர வங்காலையில் உள்ள சரணாலயம் பலரையும் கவர்ந்து வருகின்றது.  ஒரு பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்றது.    

அதேபோலத்தான், பூநகரி, ஆலடியிலிருந்து கல்முனை வரை செல்லக்கூடிய 10 கி. மீற்றர் நீளம் கொண்ட மணற்பாங்கான பிரதேசம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஓர் இடமாகக் காணப்படுகின்றது. மண்டித்தலை, கௌதாரிமுனை, வெட்டுக்காட்டை அண்டிய கடற்பரப்பு இதுவாகும்.  வடபகுதியில் ஏனைய இடங்களைக் காட்டிலும் பாறைகள் அற்ற மணற்பாங்கான ஆழம்குறைங்த கடல்களாக இவை இருப்பதனால் பலரும் அங்கு வந்து செல்கின்றார்கள்.   

பூநகரி, மண்டித்தலை, கௌதாரி முனைக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் இடைப்பட்ட ஆழம் குறைந்த பரவைக்கடல் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இப்பொழுது காணப்படுகின்றது. 

இவ்வாறான ஓர் இடம் சுற்றுலாவுக்குரிய வகையில் மாற்றப்பட்டு, படகுச் சேவைகள் மேற்கொள்ளப்படுமானால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த படகுப் ​போக்குவரத்தை இங்கு அறிமுகப்படுத்தி சுற்றுலாவை மேலும் அபிவிருத்தி செய்வதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

இப்பிரதேசத்தில்தான் வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தைப்பற்றி, 15 ஆம் நூற்றாண்டில் எழுந்த கோகிலசந்தேசி என்ற இலக்கியத்தில் சிறப்பாகக் கூறப்படுகின்றது.  

ஆனையிறவுப் பாதை திறப்பதற்கு முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான கடல், தரை வழிப்பாதை யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையிலிருந்து பூநகரி, மண்டித்தலை ஊடாக மாதோட்டம் சென்று அங்கிருந்து அநுராதபுரம் ஊடாக தென்இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.   

கோகில சந்தேசியத்தில் இந்தக் கடற்கரைப் பிரதேசம் மிக அற்புதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அது சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய ஓர் இடமாகக் காணப்படுகின்றது.   

‘கோகிலசந்தேசிய’ என்ற இலக்கியம், கோட்டை இராச்சியத்திலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் சப்புமல் குமரய்யா என்ற ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்து வந்தான். அவனுடைய படை எந்தெந்த வழியூடாக நகர்ந்தது, அந்தந்த வழிகளில் எதிர்ப்பட்ட நகரங்கள், தரிசித்த ஆலயங்கள், எந்த ஊரில் படைகள் தங்கியிருந்தன போன்ற விவரங்கள் அனைத்தையும் விவரிக்கும் ஆவணமாகக் காணப்படுகிறது. 

இதில் மாதோட்டத்தை வந்தடைந்த படைகள், அங்கிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கல்முனையில் தங்கியிருந்து, கொழும்புத்துறைக்கு வந்து, கொழும்புத்துறையில் யாழ்ப்பாண மன்னரின் படைகளை எதிர்த்துப் போரிட்டு, பின்னர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி, அங்கிருந்த இந்து ஆலயத்தை வழிபட்டதாக இந்த இலக்கியத்தில் கூறப்படுகின்றது. 

மாதோட்டம் வந்த படைகள் அங்கிருந்து பூநகரி ஊடாக கல்முனை வரும்போது அதன் மணற்பாங்கான தரையமைப்பையும் ஆளமற்ற கடற்கரையையும் வீசிய இதமான தென்றலையும் கவித்துவமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இன்றும் மண்டித்தலை, கல்முனை கடற்கரைக்குச் செல்வோர் அந்த அழகையும் இரம்மியத்தையும் உணர்வுபூர்வமாக உணரமுடியும்.  கல்முனையில் தங்கியிருந்த படைகள் பரவைக்கடலினூடாக கொழும்புத்துறையை அடைந்தபோது, பரவைக்கடலின் தன்மையும் ஆழமற்ற, அலைகள் இல்லாத, அமைதியான கடலின் ரம்மியமான அழகையும் இந்த இலக்கியம் வர்ணித்துச் செல்லுகின்றது.

 இதேநேரத்தில் குடாநாட்டிலும் வடபகுதியிலும் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள் காணப்படுகின்றன. இராமாயணம் ஓர் ஐதீகமான புராணமாகக் பார்க்கப்பட்டாலும் அந்த இடங்களினுடைய வரலாறும் அந்த வரலாற்று மையங்களில் பேணப்படுகின்ற மரபுகளும் சுற்றாடலில் வாழுகின்ற மக்களினுடைய வாழ்க்கையோடு இரண்டறக்கலந்திருப்பதனால், அவை இன்று வரலாற்றுப் பெருமையும் பழைமையும் வாய்ந்த அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பிரபல்யமான சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன.   

குறிப்பாக, புத்தூரில் நிலாவரையிலுள்ள ஆழம் அறியமுடியாத நிலாவரைக் கிணறு இராமாயணத்துடன் தொடர்புடைய ஒரு சுற்றுலா மையமாக பேசப்படுகிறது. அதேபோல், யாழ்ப்பாணத்தில் வண்ணார் பண்ணையில் உள்ள வில்லூன்றி தீர்த்தக்கேணியும் இராமாயணத்துடன் தொடர்புடைய ஓர் இடமாகும். 

பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் கூறியதுபோல், இங்​கே இறந்தவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கிரிகைகளும் சடங்குகளும் தொட்டுணர முடியாத யாழ்ப்பாணத்துப் பண்பாடாகக் காணப்படுகின்றது. பலரும் அவற்றினுடைய மரபுகளைச் சம்பிரதாயங்களை ஆராய்வதற்கு இன்று வில்லூன்றி தீர்த்தக் கேணி மண்டபத்தில் நடைபெறுகின்ற மரணச் சடங்குக் கிரியைகள், அந்தியேட்டி சடங்குகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக செல்லுகின்றனர். ஏனெனில் யாழ்ப்பாணத்தினுடைய பாரம்பரிய தொட்டுணர முடியாத பல அம்சங்கள், அப்படியே பேணப்படுகின்ற தன்மை காணப்படுவதாக பேராசிரியர் புஸ்பரெட்ணம் அவர்கள் கூறுகின்றார்.   

இயற்கை வளங்களுக்கு அப்பால் குடாநாட்டில் பல ​தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவருகின்ற இடங்களாகக் காணப்படுகின்றன. அவற்றில் வழிபாட்டுத் தலங்கள் மிக முக்கியமான மரபுரிமை அம்சங்களாகக் காணப்படுகின்றன.   

இங்கு இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன.   

போர்த்துக்கேயர் தமது ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் சிறிதும் பெரிதுமான 500 க்கும் மேற்பட்ட ஆலயங்களை அழித்துள்ளனர். அவ்விடங்களில் கத்தோலிக்க ​தேவாலயங்களை அமைத்தார்கள் என்று கூறப்படுகின்றது.  

அதன் பின்னர் இந்த ஆலயங்களில் பெரும்பாலானவை ஒல்லாந்தரால் புரட்டஸ்தாந்து ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. போர்த்துக்​கேய காலத்தைய ஆலயங்கள் மிக அரிதாக காணப்பட்டாலும் கலைமரபுடன் கூடியவை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதசுதந்திரம் அளிக்கப்பட்டதன் பின்னர், முன்னைய கொலனித்துவ ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட ஆலயங்கள் இருந்த இடத்தில் அவற்றின் பெயரோடு மீண்டும் ஆலயங்கள் தோற்றம் பெற்றன. இதனால் அந்தந்த ஆலயங்களின் வரலாறும் பண்பாடும் ஐதீகங்களும் முன்னைய ஆலயங்களின் ஒரு தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன.   

அந்தவகையில் இன்று நல்லூர், நகுலேஸ்வரம், மாவிட்டபுரம், பறாளை விநாயகர், வல்லிபுரம் விஷ்ணு கோவில், சட்டநாதர் கோவில், வீரமாகாளி அமம்மன் கோவில் எனப் பல வரலாற்று ஆலயங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டியவையாகும்.  

இந்து ஆலயங்களுடன் ஒப்பிடும்போது, எண்ணிக்கையில் பௌத்தவழிபாட்டிடம் குறைந்தளவில் காணப்பட்டபோதிலும், கந்தரோடையிலும் நெடுந்தீவிலும் உள்ள பௌத்த ஸ்தூபிகளையும் அவற்றின் அழிபாடுகளையும் பார்ப்பதில் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பரவியிருந்த தமிழ் பௌத்தத்தின் தொடர்ச்சியாக இலங்கையிலும் தமிழ் பௌத்தம் பரவியிருந்ததை நிரூபிக்கும் வகையில் இவை காணப்படுகின்றன.   

16 ஆம் நூற்றாண்டின் பின்னர், ஐரோப்பியர் ஆட்சியில் அவர்களுடைய பயன்பாடு பெரிதும் யாழ்ப்பாணத்திலும் வட இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதனால் போர்த்துக்கேயர் காலத்து கத்தோலிக்க ஆலயங்களும் ஒல்லாந்தர் பிரித்தானியர் கால வரலாற்றுப் பழைமைவாய்ந்த புரட்டஸ்தாந்து ஆ​லயங்களும் இங்கு முக்கிய மரபுரிமைச் சின்னங்களாகக் காணப்படுகின்றன.   

பிரித்தானிய ஆட்சியின் பிற்பகுதியில் அவற்றின் கலைமரபுகள் மாற்றியமைக்கப்பட்டாலும் ஒல்லாந்து நாட்டவரினுடைய கலைமரபுகளுடன் கூடிய கிறிஸ்தவ ஆலயங்கள் மணற்காடு, வல்வெட்டித்தறை, சங்கானை, அச்சுவேலி என்று பல இடங்களில் காணப்படுகின்றன.  

அதேபோலதான் சாட்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பழைமை வாய்ந்த மசூதிகளைப் பார்ப்பதற்கும் பலர் இங்கு வருகை தருகின்றார்கள். 

இந்த வழிபாட்டு ஆலயங்களைத் தவிர, யாழ்ப்பாண இராசதானி மையம்கொண்டிருந்த நல்லூரில் உள்ள மந்திரி​மனை, சங்கிலியன்தோப்பு, யமுனா ஏரி போன்ற வரலாற்று மையங்களைப் பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றார்கள்.   

   உலக அளவில் தொழில்சார் நிபுணத்துவ ரீதியில் வடபகுதி சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படாவிட்டாலும், இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் கணிசமானவர்கள் இவ்வாறான மையங்களுக்குச் சென்று அவற்றைப் புகைப்படமாகவும் ஒளிப்படமாகவும் எடுத்து ஆவணப்படுத்தி வருகின்ற ஒரு மரபு காணப்படுகின்றது.   

மேலும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள சமூகப் பழக்க வழக்கங்கள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு முறைகள் என்பவற்றையும் ஆராய்வதற்காகவும் இங்கே வருகின்றார்கள். இந்த வருகையின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, இன்று யாழ்ப்பாணத்திலும் வட இலங்கையிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பாரம்பரிய உணவு விடுதிகள், பாரம்பரிய ஆடைகள், பாரம்பரிய பாவனைப் பொருட்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாவனையிலிருந்த பாவனைப் பொருள்கள் வீட்டுப் பாவனைப் பொருள்கள் போன்றவை, முக்கிய வணிக மையங்களிலம் அரச நிறுவனங்களிலும் பிறர் பார்த்து இரசிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்படுகின்ற தன்மையும் வளர்ச்சிபெற்று வருகின்றது.    

ஏ9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர், சுற்றுலாப் பயணிகளின் கணிசமான வருகையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பலவிடுதிகள் உருவாகி வருகின்றன. பெரும்பாலானவர்களின் முதலீடு விடுதிகளை உருவாக்குதிலேயே காணப்படுகின்றது. 

பேராசிரியர் ப. புஸ்பரெட்ணம் வடபகுதி சுற்றுலாத்துறையின் தீர்க்கமான வளர்ச்சி குறித்து தெரிவித்த கருத்து, திட்டங்களை உருவாக்குபவர்களும் செயற்படுத்துபவர்களும் சிந்தையில் எடுக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.  “உலகில் எந்தவொரு தொல்லியல் மையத்தை, கலாசார மையத்தை அல்லது அற்புதமான இயற்கை வளத்தைப் பார்ப்பதற்கு பெரு​மளவு நிதியைச் செலவு செய்து போகின்ற இன்று, தன்மை மிகக் குறைந்து வருகின்றது. ஆகவே, வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா மையங்கள் தனித்தனியாக இருந்தாலும், அவற்றை மக்கள் விரும்பிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்.  உதாரணமாக துர்க்கையம்மன் கோவிலைப் பார்ப்பதற்கு பல நாட்டவர்கள் வருகை தருகின்றார்கள். ஆனால், அந்தக் கோவிலை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவது அவர்களுடைய நோக்கமாக இல்லை. ஆகவே துர்க்கையம்மன் கோவிலை, நாங்கள் ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றுகின்றபோது, அந்த இடத்துக்கு வருகின்றவர்களுக்குரிய உணவுகள், பாதுகாப்பு தங்குமிட வசதிகளோடு அந்த இடத்தைப் பார்ப்பவர்கள் அருகிலுள்ள ஏனைய சுற்றுலா மையங்களையும் சென்று பார்ப்பதற்கான பிரசாரங்கள், போக்குவரத்து வசதிகள், பொருத்தமான உணவுவிடுதிகள், சுகாதாரம் போன்றவற்றையும் ஏற்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் ஆகிய ஆலயங்களையும் அவை அமைந்திருக்கும் சுற்றாடலையும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாக மாற்றலாம். இவற்றை ஏற்படுத்துவதன் மூலம் வடபகுதியினுடைய சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என்பது என்னுடைய கருத்தாகும்.   

பொதுவாக இந்தச் சுற்றுலாவினால் வருமானம் வருகின்றது; பலருக்கு வேலைவாய்ப்பு வருகின்றது; புதிய தொழிற்கூடங்கள் உருவாகின்றன என்பது மறுப்பதற்கில்லை. பல நன்மைகள் இருக்கின்றபோதிலும் சில தீமைகள் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் தங்களுடைய உணவுமுறை, வாழ்க்கைமுறை பண்பாடு என்பவற்றை தாம் செல்லுகின்ற இடத்தில் பின்பற்றுகின்றபோது, அதை அங்கிருக்கின்றவர்களும் பின்பற்றும்போது, சில வேளைகளில் வடபகுதியின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முரணாக இருக்கும்.

எமது சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பது, வெறுமனே பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு நன்மைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது, எமது பண்பாட்டு தனித்துவத்தை மற்றவர்கள் மதிப்பதற்கு ஏற்ற வகையில் சுற்றுலாப்பயணிகளுக்குச் சொல்லப்பட்டு, பாதுகாக்கப்படுவது அவசியமாகும். அதேநேரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எங்களுடைய தனித்துவம், பண்பாடு, விழுமியங்கள், சமூக, குடும்ப உறவு முறைகள் மாற்றமடையாமல் பாதுகாக்கப்படுவதும் சுற்றுலாவை ஊக்குவிக்கின்ற திணைக்களங்கள் அமைப்புகளுக்கு முக்கிய பொறுப்புகளாகக் காணப்படுகின்றன.   

இன்று சீன, ஜப்பான் போன்ற நாடுகள் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொண்டாலும் தமது மரபுரிமை அடையாளங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் அழிந்தும் மறைந்தும் போகாமல் இருக்கும் வகையில் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர்.   

ஆகவே வடபகுதியின் சுற்றுலா என்பது, எம்முடைய பாரம்பரிய பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய வகையில் வளர்த்து மக்கள் பொருளாதார ரீதியில், தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் அடையக்கூடிய வகையில் மாற்றியமைப்பது எங்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது” என்று பேராசிரியர் தெரிவித்தார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .