2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி’

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு, திட்டமிட்டவகையில் அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதற்கும் படைவீரர்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையே பிளவை ஏற்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது” என, ஜனாதிபதி அலுவலகத்தால் நேற்று விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை தெரிவித்தது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “ஜனாதிபதி அலுவலக வளாகத்துக்கு வந்த அப்பாவிகளான அங்கவீனமுற்ற படையினர், அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதை அறிந்திருக்கவில்லை என்பது தெளிவானதாகும்.

“இந்தக் கோரிக்கையைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு மாதங்களுக்கு முன்னர் ஓர் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அது குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஜனாதிபதி, இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டிருந்தார்.

“பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதிநிதிகளுக்கும் படைவீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையே பாதுகாப்பு அமைச்சில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அசம்பாவித நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

“இந்த சேவை ஓய்வூதியக் கொடுப்பனவை 12 வருடங்களுக்குக் குறைந்த காலம் சேவையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற படைவீரர்களுக்குப் பெற்றுக்கொடுப்பது இராணுவத்தின் ஓய்வூதிய பணிக்கொடை சட்டக்கோவையின் ஏற்பாடுகளுக்கு ஏற்புடையதல்லாதபோதிலும், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அந்த சட்டதிட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு சேவை ஓய்வூதியத்தை இந்த படைவீரர்களுக்கும் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“ஓய்வுபெற்ற படைவீரர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் ஒரு கலகத்தை உண்டுபண்ண வேண்டும் என்பது, சூழ்ச்சிக்காரர்களுக்கு தேவையாக இருந்தது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் தற்போது வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவுகள், இடர் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக சேவை ஓய்வூதியத்தையும் வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு 2016 நவம்பர் மாதம் 06ஆம் திகதி ஒரு விசேட ஊடக அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .