2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

'தனித்தனியே போட்டியிட்டாலும் இணைந்தே ஆட்சியமையும்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

எதிர்வரும் தேர்தல்களின் போது, நாட்டின் பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், தனித்தனியே போட்டியிட்டாலும், இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்தே ஆட்சியமைக்கும் என, அரசாங்கம் நேற்றுப் புதன்கிழமை அறிவித்தது.

'இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, வெற்றிகரமானதொரு பயணத்தைத் தொடர்ந்துள்ளன. இந்த வெற்றிப் பயணம், ஐந்து வருடங்களுக்கு தொடரும்' என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, கூறினார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

'நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு, இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாரமாகும். சுதந்திரக் கட்சியின் 65ஆவது தேசிய மாநாடு, கடந்த வார இறுதியில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது தேசிய மாநாடு, இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளது.

சு.க.வின் தேசிய மாநாட்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் கலந்துகொண்டிருந்தார். அதேபோன்று, ஐ.தே.க.வின் தேசிய மாநாட்டில், சு.க.வின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது' என அமைச்சர் மேலும் கூறினார்.

'2020ஆம் ஆண்டில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் என்று ஜனாதிபதி அறிவித்தது உண்மை. அதன் அர்த்தம், சு.க.வை வெற்றிகொள்ளச் செய்வதேயாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராகவே போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

ஆனால், தற்போது அவர், சு.க.வின் தலைவர். அவரது கட்சியை மேம்படுத்த, ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை' என்று இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர், சு.கா மாநாட்டில் நீங்கள் பங்கேற்கவில்லையே, ஐ.தே.க மாநாட்டில் பங்கேற்பீர்களா? என்றுக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், 'சு.க மாநாட்டில் பங்கேற்குமாறு, எனக்கு அழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஐ.தே.க மாநாட்டில் பங்கேற்குமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X