2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'தமிழ் கைதிகளுக்கும் பிணை வழங்கவும்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்டகாலத் தடுப்புக்காவல் தமிழ் கைதிகளை பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவு அடிப்படைகளில் விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர், கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமக்குப் பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றை பெற்றுத் தரும்படி கோருகிறார்கள். பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்குப் பிணை வழங்கல், சட்ட மா அதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து சாத்தியமாகியது.

இந்நிலையில், பல வருடங்களாக நீண்ட காலமாகத் தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த காலங்களை விட, தமிழ் மக்களால் இன்று அதிகமாக உணரப்படுகிறது. தமிழ் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு ஆளும் தரப்பு, எதிர் தரப்பு அரசியல் கட்சிகளும் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன.

இது தமிழ்-சிங்கள புத்தாண்டு காலம். அடுத்த மாதம் சர்வதேச வெசாக் பண்டிகையை, ஐ.நா சபையின் ஆதரவுடன், இலங்கையில் முதன் முறையாக நமது அரசாங்கம் கொண்டாடவுள்ளது.

இவற்றைக் கணக்கில் கொண்டு, நீண்டகாலத் தடுப்புக்காவல் தமிழ் கைதிகளை பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவு அடிப்படைகளில் விடுவிக்க ஆவனஞ் செய்ய வேண்டுகிறேன்.

இவ்விடயத்தில் தொடர்ந்து விளையாட முடியாது. இவர்களுக்கு ஒரு சட்டம். அவர்களுக்கு ஒரு சட்டம் என்று இரண்டு வித சட்டங்கள், கவனிப்புகள் இந்நாட்டில் இருக்க முடியாது. இப்படி இருந்தால், நான் எப்படி, தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் இனங்களுக்கு மத்தியில் சகவாழ்வை உருவாக்குவது?

தமிழ் கைதிகள் மீதான குற்றச்சாட்டும், விமல் வீரவன்ச எம்.பி மீதான குற்றச்சாட்டுகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், இந்தக் கைதிகள் மிக நீண்டகாலமாக சிறைகளில் இருக்கிறார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், கைதிகளுக்கு நிவாரணம் வழங்காமல் இருக்க, இந்த சட்ட அடிப்படைகளை கண்டுபிடித்து சொல்ல இங்கே பலர் காத்திருக்கின்றர்கள்.

இந்தக் கைதிகளில் பலரது வாழ்வின் பெரும்பாகம் சிறைகளில் முடிந்தே விட்டது. சட்ட அடிப்படைகளை விட இந்த மனிதாபிமான அடிப்படைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று ஜனாதிபதியிடம் இது தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிக்கிறேன். அதேபோல் அடுத்தவாரம், அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுபற்றி பேசவுள்ளேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X