2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘வாக்குறுதிகளை நிறைவேற்றினால் GSP+ஐ வழங்குங்கள்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட தூதுக் குழுவிடம் தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக் குழுவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதன் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர், விசேட கலந்துரையாடலொன்றை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) மேற்கொண்டனர்.

இச்சந்திப்புத் தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “ஜி.எஸ்.பி பிளஸ்-ஐ இலங்கைக்கு வழங்குவதா, இல்லையா எனத் தீர்மானிப்பதற்கு, இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவுடன் கலந்துரையாடினோம். 

ஜி.எஸ்.பி பிளஸ்-ஐ இலங்கைக்கு வழங்குவதை வரவேற்கிறோம். கட்டாயம் அது கொடுக்கப்பட வேண்டும். என்ன காரணங்களுக்காக அது நீக்கப்பட்டதோ, அந்தக்காரணங்கள் தொடர்பில், ஆராய வேண்டும். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், மிகவும் மோசமானதாக உள்ளது என அவர்களிடம் தெரிவித்தோம். 

இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பிலும் புதிய அரசியலமைப்புத் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும்.  

பொறுப்புக் கூறல் கடப்பாட்டின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில், காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. 

சில நிபந்தனைகளின் அடிப்படையில், ஜீ.எஸ்.பி பிளஸ் கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவருடம் அல்லது ஆறு மாதத்துக்குள், சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என பார்த்து கொடுக்கப்பட வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தோம்” என்று அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .