2026 மே 09, சனிக்கிழமை

’1,500 பேருக்கு கப்பல் கொடுக்க இந்தியா சம்மதம்’

Editorial   / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 காரணமாக, தென்னிந்தியாவில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை, கட்டம் கட்டமாக கப்பல் மூலமாக இலங்கைக்கு அழைத்துவருமாறு இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுமார் 1,500க்கும் அதிகமானவர்கள், இந்தியாவில் சிக்கியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தப் பிரச்சினைக்கு இரு அரசாங்கங்களும் இராஜதந்திர மூலம் தீர்வு காணவேண்டிய அவசியம் உள்ளது எனவும் இந்தியாவின் கவனத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. 

இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் நேற்றுமுன்தினம் (07) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, மேற்கண்ட விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. 

அந்த விடயங்களுக்கு மேலதிகமாக மீனவர்களின் விவகாரங்களில் தொடர்பு பட்டிருக்கும் இருதரப்பு அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்புகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர், இவ்வாறான ஒத்துழைப்பு காரணமாக இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களின் உயிர்கள் கடலில் பாதுகாக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். 

சீரற்ற காலநிலை காரணமாக கடலில் உயிரிழந்த இந்திய மீனவர்களின் சடலங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த சகல முயற்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துகொண்ட, இந்திய உயர் ஸ்தானிகர், மீனவர்கள், படகுகள் குறித்து மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டிய தேவை இருப்பதனையும் எடுத்துரைத்துள்ளார். 

மீனவர் விவகாரத்தில் காணப்படும் சகல விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு தமிழக மாநில அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் சக லவழிகளிலும் மேற்கொண்டுவரும் வலுவான நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்த இந்திய உயர் ஸ்தானிகர், ஆழ்கடல் மீன்பிடியைத் தொடர இந்திய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் தெளிவுப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், பாக்கு நீரிணை மற்றும் மன்னார் குடாவுக்கான கூட்டு முகாமைத்துவத்துக்கான கோரிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார். அதுதொடர்பில், பரந்தளவில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதாக உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .