Janu / 2026 மார்ச் 03 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த 107 விமானப் பயணங்களும், கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்படவிருந்த 98 பயணங்களும் என மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பிராந்தியத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைகளும் விமான நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
எனினும், தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தமது வான் எல்லைகளைத் திறந்துள்ளதாகவும், அதன் ஊடாகச் சில விமான நிறுவனங்கள் தமது சேவைகளை மீள ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய வான் எல்லைகள் தற்போது வரையறுக்கப்பட்ட காலத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன. அங்கு விசேட விமானங்களுக்கு மாத்திரம் வான் பரப்பைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் நோக்கில் தற்போது பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள பெருமளவிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனுர கருணாதிலக்க குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையிலுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்று வான் வழிகள் ஊடாக "விசேட விமானங்கள்" பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கு மேலதிகப் பயண நேரம் தேவைப்படுவதால், குறித்த விமானங்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் (Cargo) அளவைக் கட்டுப்படுத்த நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த 50 நாட்களுக்குத் தேவையான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை அவர்கள் இங்கிருந்து புறப்படும் வரை மேலதிகக் கட்டணமின்றி நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் நாடு திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டுகளை எவ்வித மேலதிகக் கட்டணமுமின்றி புதுப்பிக்க அல்லது புதிய பயணச்சீட்டுகளை வழங்க விமான நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
டீ.கே.ஜி. கபில
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago