2026 மே 18, திங்கட்கிழமை

’’அம்மா, எனக்கு மூச்சு முட்டுது!’’ உரையாடல்கள் அம்பலம்

Editorial   / 2026 மே 18 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

  "எனக்கு இங்கே ரொம்ப மூச்சு முட்டுற மாதிரி இருக்கு அம்மா,   போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் பிணமாக மீட்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ட்விஷா சர்மா தனது தாயாருக்கு அனுப்பிய உருக்கமான குறுஞ்செய்திகளில் இதுவும் ஒன்றாகும்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா சர்மா, எம்பிஏ (MBA) பட்டதாரி ஆவார். இவருக்கும் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருக்கும் கடந்த 2024ஆம் ஆண்டு 'டேட்டிங் ஆப்'  ஒன்றின் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் 2025 டிசம்பரில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (மே 12) ட்விஷா தனது கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடற்கூறாய்வு   முதற்கட்ட அறிக்கையின்படி, ட்விஷா "தூக்கிலிடப்பட்டதால்   உயிரிழந்துள்ளார் என்பதும், அவர் தூக்கில் தொங்கும்போது உயிரோடு இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலின் பிற பகுதிகளில் "மரணத்திற்கு முந்தைய பல காயங்கள் மற்றும் தழும்புகள்  " இருந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ட்விஷாவுக்கும் அவரது தாயாருக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம், அவர் இந்த மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையில் 'சிக்கிக்கொண்டதை' உணர்ந்ததும், மனரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ட்விஷா, தன்னை வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தனது தாயிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சியுள்ளார்.

என்டிடிவிஊடகத்திற்கு கிடைத்துள்ள இந்த வாட்ஸ்அப் உரையாடல்களின்படி, கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி ட்விஷா தனது தாயிடம், "என்னை ஏன் போபாலுக்கு அனுப்பி வைத்தீர்கள்?" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். போபால் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் தனது கணவர் சமர்த் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"என்னை ஏன் இங்க அனுப்பினீங்க? இவன் என்கிட்ட பேசுறதே இல்லை“ என்று தாய்க்கு எழுதியவர், "என்னை போபாலுக்கு வரவழைத்து, மீண்டும் அதே பழைய நாடகத்தை ஆடுகிறான் " என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகப் பிரச்சினைகள் இருந்துள்ளமை தெளிவாகிறது. மற்றொரு செய்தியில், "அம்மா, என் வாழ்க்கை நரகமாகிவிட்டது " என்றும் அவர் கதறியுள்ளார்.

 

கடந்த மே 7ஆம் திகதி அனுப்பிய செய்தியில், "அம்மா, தயவுசெய்து நாளைக்கு வந்து என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க," என்று ட்விஷா தனது தாயிடம் மண்டியிட்டுக் கேட்டுள்ளார். தனது கணவருக்கு இனி தன்னைத் தேவையில்லை என்றும், அவர் "ஒரு வருடமாகத் தன்னை சகித்துக் கொண்டிருப்பதாகவும்" ட்விஷா அதில் குறிப்பிட்டுள்ளார். தனது கணவரை ஏமாற்றும்படி தான் என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் தவித்த ட்விஷா, தன் தாயை மட்டும் தனியாக வருமாறு கேட்டுக்கொண்டார்.

 

மற்றொரு உரையாடலில், தான் மிகவும் தனிமையாக உணர்வதாகவும், நொய்டாவில் உள்ள தனது குடும்பத்தினரை மிகவும் மிஸ் செய்வதாகவும் ட்விஷா தெரிவித்துள்ளார். தான் தற்போது தனிமையில் இருப்பதற்கும், இந்த நிலைமைக்கும் தனது "தீய வினைகளே" காரணம் என்றும் அவர் தன்னைத்தானே நொந்துகொண்டுள்ளார்.

 

ட்விஷாவிற்குத் திருமணத்திற்குப் புறம்பான உறவின் மூலம் குழந்தை உருவானதாகக் பழிசுமத்தப்பட்டு, அதன் பின்னர் அவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த அவர், "நான் எப்படி இவனுடன் வாழ்வது?" என்று தாயிடம் பலமுறை கேட்டுள்ளார்.

"இந்தக் குழந்தை யாருடையது என்று அவன் என்னைக் கேட்கிறான், அதை நான் சும்மா கடந்து போக வேண்டுமா??? நீங்கள் என்ன மாதிரியான பெண்! அவன் தனது கேவலமான புத்தியின் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டான். இவனுடன் நான் எப்படி வாழ்வது?" என்று சனிக்கிழமை (மே 9) மதியம் அனுப்பிய தொடர் செய்திகளில் ட்விஷா ஆத்திரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கணவர் மாமியாருக்கு முன்னால் நல்லவன் போல் நடித்துக்கொண்டு, தனிமையில் தன்னிடம் விஷத்தைக் கக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "அம்மா, இங்கிருந்தா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும். என்னால இதையெல்லாம் தாங்கிக்கவே முடியல " என்றும் எழுதியுள்ளார்.

தனது கணவனின் மிரட்டல் கோரிக்கைகளைத் தாயுடன் பகிர்ந்துகொண்ட ட்விஷா, "என் அப்பா அவனது காலில் விழுந்து, மூக்கை தரையில் தேய்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான்," என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவரது தாய், தான் போபாலுக்கு வந்து கணவரிடம் மன்னிப்பு கேட்பதாகக் கூறியபோது, ட்விஷா அதனை நிராகரித்துவிட்டார்.

மேலும், தனது "தனிப்பட்ட பொழுதுபோக்குக்காக" தன் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாம் என்றும் ட்விஷா தனது தாயிடம் ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பதற்கான பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தனது கணவர் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகிய இருவருமே "இரக்கமற்றவர்கள்" என்று சாடியுள்ள ட்விஷா, தனக்கு "மூச்சு முட்டுவதாக" மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். "இந்த மனிதன் மிகவும் கேவலமாகப் பேசுகிறான்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அவரது தாய், "அவனுக்கும் உன்னோடு வாழ விருப்பமில்லை என்றால் நானும் இருக்க மாட்டேன், ஆனால் உன்னை அசிங்கமாகப் பேசக் கூடாது என்று உன் மாமியாரிடம் பேசி விபரத்தைக் கேள்," என்று ட்விஷாவிற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போபால் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X