2026 மே 09, சனிக்கிழமை

’அரசாங்கத்தின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்’

Niroshini   / 2021 மே 14 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதனூடாக தமிழர்களுடைய உணர்வுகளை அழிக்க முடியாதென ​தெரிவித்த,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் தனது இறுதி ஊர்வலத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்றார்.

தமிழர்களுடைய வரலாறுகளை, தமிழர்களுக்கு நினைவு கூறும் வாய்ப்பை கூட இல்லாமலாக்கும் ஓர் அரசாங்கம். ''தமிழர்களுடைய உணர்வுகளை நீங்கள் இவ்வாறான நினைவு சின்னங்களை இடித்து அழிக்க முடியாது. நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாகத்தான் நான் பார்க்கின்றேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சாணக்கியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கம் எவ்வாறு தான் தமிழ் மக்களின் உணர்வுகளை தடுக்க முயற்சித்தாலும், நடந்த எந்த விடயங்களையும் மறக்க மாட்டோமெனவும், இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த அநீதியையும் தமிழ் மக்கள் மறக்கப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு, இதேவாரத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்கான உறவுகளை நாங்கள் இழந்திருந்தோம். அந்த உறவுகள் உயிரிழந்த திகதியோ, உயிரிழந்த இடமோ தெரியாத நிலையிலே கூட அனைவரையும் நினைவு கூர்கின்ற ஓரிடமாக அந்த நினைவுச் சின்னத்தை, தமிழர்கள் கடந்த வருடங்களில் பயன்படுத்தியிருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் தமிழ் பிரதிநிதிகளும் இந்த விடயத்துக்கு கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ள அவர், ''அரசாங்கம் தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டது என்பதை நான் இந்த இடத்திலே சொல்ல விரும்புகின்றேன். பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஒரு வருடத்துக்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது.“ எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .