2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இணைந்து செயற்பட மஹிந்தவுக்கு அழைப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் தற்போது தனித்து ஆட்சியமைக்க முடியாது. அதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட யாருக்கும், மக்கள் தரவில்லை.

“அதனால்தான் இணைந்து ஆட்சியமைத்தோம். கட்சியை பிளவுப்படுத்தினால் பழைய நிலைக்கு சென்று விடுவோம்” என விஞ்ஞானம், தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, தெரிவித்தார். 

அமைச்சில் நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார். அவர் அங்கு தொடரந்து கூறுகையில் “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

“இப்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பலமாக உள்ளது. இன்னும் சில வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுக்கவேண்டும். எல்லா தொகுதிகளுக்கும் அமைப்பாளர்களையும் நியமித்து விட்டோம். இன்னும் 11 பேரை மாத்திரமே நியமிக்கவேண்டும். 

“ஜனாதிபதி மீதும், கட்சி மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கின்றேன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்வோம். 

“நள்ளிரவில் விழித்து சூரியன் உதிக்க வேண்டும் என்று நினைப்பதை போன்றுதான மஹிந்த ராஜபக்‌ஷவின் எதிர்பார்ப்பு உல்லது. நடக்க வேண்டியவை உரிய காலத்தில் நடக்கும். அதனை மாற்ற முடியாது. 

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த 80 சதவீதமான உறுப்பினர்களுக்குச் சம்மதம் இல்லை. கட்சியை இரண்டாகப் பிளந்து புதிய கட்சியை ஆரம்பிக்க மஹிந்த நினைத்தால், அது சாத்தியப்படாத ஒன்றாகும். கட்சிகளை பிளவுபடுத்தி, உருவாக்கப்பட்ட புதிய கட்சிகளினால் கொஞ்சக் காலம்கூட தாக்குப்பிடிக்க முடியாது என்பதைக் கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம்.  

“சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த விமல் வீரவன்ச போன்றவர்களுக்கே தேவையாக உள்ளது. கட்சியில் ஏற்பட்ட பிளவினால், ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன, பல வருடங்களாக அதிகாரத்துக்கு வரமுடியாமல் எதிர்க்கட்சிகளாக இருந்தன. தற்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தினால், அதே நிலைதான் ஏற்படும். இது ஐக்கியத் தேசியக் கட்சிக்குதான் நன்மையாக அமையும். 

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது, அன்பு இருந்தால் கட்சியுடன் இணைந்து செயற்பட மஹிந்த ராஷபக்‌ஷ முன்வரவேண்டும். அதனை விடுத்து, கட்சியை பிளவுபடுத்த நினைத்தால் அது தவறு. 

“இதேவேளை, நாடாளுமன்றத்திலும் கட்சிக்குள்ளும் வெளியேயும் ஜனாநாயகம், தாராளமாக உள்ளது. தேவையை விட அதிகமாக ஜனநாயகம் இருந்ததால் என்ன நடக்கும் என்பது இப்போது புரிகின்றது” என்றார். 

“அத்துடன், இணைந்து போட்டியிட்டமை கடந்த பொதுத் தேர்தலோடு முடிந்துவிட்டது. இனி எல்லாத் தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துத்தான் போட்டியிடும். எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் உள்ளளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என்று நம்பிக்கையுள்ளது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X