2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை

Editorial   / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.ஆர்.லெம்பேட்

 இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை  ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இலங்கை கொழும்பு துறைமுக காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 2020.05.09 ஆம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் காவல் நிலையத்தில் வைக்கப் பட்ட 23 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர்   இலங்கை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதீப் குமார் பண்டார, போதைப்பொருளை கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸூக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொஸார் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர்.

விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது  சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டார ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த நிலையில் இவ் வழக்கில்    புதன்கிழமை (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து   திருச்சி சிறப்பு முகாமில் 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்தினார்.

விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்து, அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .