2026 மே 01, வெள்ளிக்கிழமை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்

R.Maheshwary   / 2021 மார்ச் 22 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாறுக் ஷிஹான்

மனித உரிமைகளை மேம்படுத்தி, பாதுகாப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டு வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சுதந்திரமான ஆணைக்குழு எனவும் அவ்வப்போது தேசிய ரீதியில் இடம்பெற்ற சிறுபான்மை மக்களுக்கான உரிமை மீறல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிந்துரைகளைச் செய்திருந்ததாகவும் அந்த ஆணைக்குழுவின் புலனாய்வு விசாரணைகள் பணிப்பாளர் சுலாரி லியனகம தெரிவித்தார்.

 

அத்துடன், அரச நிர்வாக நிறைவேற்றுத் துறையினர், மக்களது அடிப்படை உரிமைகளை மீறியிருந்தால் அல்லது மீறப்பட இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், அரசுக்கு பரிந்துரைகளைச் செய்கின்ற அதிகாரமும் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிதாக நியமிக்கப்பட்ட  ஆணையாளர்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள திருக்கோணமலை, மட்டக்களப்பு,  கல்முனை மற்றும்  அம்பாறை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய காரியாலயங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை, இவ்வாரம் மேற்கொண்டிருந்தனர்.

இதில் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஹர்ஸா நவரட்ண,  அநுசூயா சண்முகநாதன் மற்றும் புலனாய்வு  விசாரணைகள் பணிப்பாளர் சுலாரி லியனகம என்பவர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

இவ்விஜயம் பற்றி கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுக் காரியாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடலில், சிவில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஆணைக்குழுவின் புலனாய்வு விசாரணைகள் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இவ்விஜயம் குறித்து ஆணையாளர் ஹர்ஸா நவரட்ண கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மனித உரிமை  நிலவரங்கள் பற்றி உண்மை நிலையை சிவில் குழுக்கள் மூலமாக கலந்துரையாடி, தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்  அவ்விடயம் ஆணைக்குழுவின் விடயப்பரப்புக்குள் உள்ளடங்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கும்  நோக்குடனேயே தாங்களது குழுவின் வருகை இருப்பதாகவும்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .