Niroshini / 2021 மே 14 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள், புதுவருட காலத்தில் தளர்த்தப்பட்டமையே புதுவருட கொரோனா கொத்தணி பரவலுக்கு மூல காரணமென அரசாங்கத்துக்கு எதிராக கைநீட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கொரோனா தொற்றொழிப்பில், இலங்கை சிறந்த இடத்தை பிடித்திருந்தது என்றார்..
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கொரோனாவை கட்டுப்படுத்த, அரசாங்கம் ஆரம்ப காலத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. கொவிட் முதலாம் சுற்று தாக்கம் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்ட பின்னணியில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டன” என்றார்.
இரண்டாம் சுற்று தாக்கமும் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில் கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 ஆவது இடத்தை பிடித்தது எனத் தெரிவித்த அவர், பலம் வாய்ந்த நாடுகளினால் கூட கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பொது மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
“புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தற்போது துரிதகரமாக முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
மேல் மாகாணத்தில் கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மேல்மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுக்கப்படும். இதற்கமைய சீனாவில் இருந்து சினோர்பாம் தடுப்பூசிகளை மேலதிகமாக பெற்றுக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .