2026 மே 09, சனிக்கிழமை

‘ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளியோம்’

Niroshini   / 2021 மே 14 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு, ஒட்சிசனைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான சகல உபகரணங்களும், கூடிய விரைவில் வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

தீவிர நிலையிலுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, ஹைப்லோ (Hiflow) என்ற ஒட்சிசன் இயந்திரம் பயன்படுத்தப்படுவதாகவும் கைவசம் 350 ஹைப்லோ இயந்திரங்கள் உள்ள நிலையில் மேலும் 350 ஹைப்லோ இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானபோது, தனது உயிரை மீட்பதற்கு  ஹைப்லோ இயந்திரமே பேருதவியதாக அமைந்ததாகவும் எனவே இந்த இயந்திரத்தை ஏனையத் தொற்றாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஒட்சிசனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், போதுமானளவு ஒட்சிசனை உற்பத்தி செய்து வருகின்றன என்றும் சில வைத்தியசாலைகளில் பாரியளவிலான திரவ ஒட்சிசன் தாங்கிகள், ஒட்சிசன் செறிவு ஆலைகள், கட்டில்களுக்கு அருகில் சிறியளவிலான ஒட்சிசன் செறிவூட்டிகள் என்பன போதுமானளவு காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கும் மேலதிகமாக 21,000 ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்துமாறு, அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்துக்கு, பணிக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், சிங்கப்பூரிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் அவற்றில் முதல் தொகுதி விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .