2026 மார்ச் 04, புதன்கிழமை

ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

Freelancer   / 2026 மார்ச் 04 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமன், குவைத் நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், பதிலுக்கு இஸ்ரேலுக்கு எதிராகவும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ட்ரோன்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகமும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகமும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகின.

இந்நிலையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் இளவரசர் சபா அல் காலித் அல் ஹமாத் அல் முபாரக் அல் சபா ஆகியோருடன் தனித்தனியே தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாடியுள்ளார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“வளைகுடா பிராந்தியத்தின் இரண்டு முக்கிய தலைவர்களுடன் பிரதமர் நேற்று பிற்பகல் பேசினார். ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டார். மேலும் குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா அவர்களுடனும் பேசினார்,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல் பின்னணியில், அந்த நாடுகளில் நடந்த தாக்குதல்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உரையாடல்களின்போது, அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிபா, சவூதி அரேபிய இளவரசர் முகம்மதுபின் சல்மான் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். அப்போது, அந்நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் கண்டித்தார். இந்த கடினமான நேரத்தில் அந்நாட்டு மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்பதாக அவர் தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X