Freelancer / 2026 மே 01 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.மு.கவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்து, வீறுகொண்டு எழுவதுதான் அ.தி.மு.கவின் தனித் தன்மை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் பொய் தகவல்களைப் பரப்பி, தமிழக மக்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் திசை திருப்பும் வேலையை, தில்லுமுல்லு முன்னேற்றக் கழகத்தினர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை. தி.மு.கவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர்.; கழகத்தை இரும்புக் கோட்டையாக மாற்றிய ஜெயலலிதா, ஆகிய இருபெரும் காவல் தெய்வங்கள் நம்மை காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, நமக்கு எதிரான கருத்துக் கணிப்புகளைக் கண்டு யாரும் மனம் தளர வேண்டாம். கருத்துக் கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு கிடையாது. எல்லா கருத்துக் கணிப்புகளையும் உடைத்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது.
2006 முதல் 2011 வரையிலான மைனாரிட்டி திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, 2011 ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அச்சமயம் சில கருத்துக் கணிப்புகள் தி.மு.க. ஆட்சி தொடரும் என்றது; சில கருத்துக் கணிப்புகள் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன.
அதுகுறித்து ஜெயலலிதாவிடம் ஊடகங்கள் கேள்வி கேட்டபோது, '218 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறுவோம்' என்று உறுதிபடத் தெரிவித்தார். சொன்னபடியே அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் வென்று, ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 23 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கப்பெறாமல் அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டது.
2016 இலும் இதேபோன்று கருத்துக் கணிப்பு சொல்லப்பட்டது. அதைப் பொய்யாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. இதுதான் வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்து, வீறுகொண்டு எழுவதுதான் அ.தி.மு.கவின் தனித் தன்மை. இந்தத் தேர்தலிலும் அத்தகைய வெற்றி கண்டிப்பாக தொடரும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 210 தொகுதிகளில் உறுதியாக வெல்லும். கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதேநேரம் `தோற்கப்போகிறோம்’ என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, இப்படியான கருத்துக் கணிப்புகளை திட்டமிட்டு வெளியிடுவதற்கு பின்னணியில் சூழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அதாவது, தி.மு.க. வெல்லப்போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் தி.மு.கவினர் முயற்சி செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (a)
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago