2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கை அழைக்காது விடின் வடக்கு வராது

Freelancer   / 2023 மே 08 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்.பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்.பிக்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சனிக்கிழமை (06)  மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைத்து அதிகாரப்பரவலாக்கல் , வடக்கிலுள்ள பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாட அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் தாயகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கருதப்படுவதால் அதிகாரப்பரவல் வடக்கு, கிழக்கைச் சார்ந்தது. அந்த வகையில் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். 

கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாதவிடத்து, குறித்த பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை கிழக்கு மாகாண எம்.பிகளையும் அழைக்க வேண்டுமென பிரதான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம் என்று குறிப்பிட்டனர்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த மாதம் புதிய யாப்பு உருவாக்கப்படும். இந்த கூட்டத்தில் கட்சியின் யாப்பு மற்றும் மாவட்ட மட்ட செயற்பாடு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் செயலாளர் துளசி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன், ரெலோவின் பேச்சாளர் கு.சுநே்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .