2026 மே 09, சனிக்கிழமை

’கொரோனாவுக்கு 90 நாட்கள் காலக்கெடு’

Editorial   / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு ஒருபுறம் முன்னெடுக்கப்படும் அதேநேரம், ஆயுர்வேத மருந்து தயாரிப்பு செயற்பாடுகள் மறுபுறம் முன்னெடுக்கப்படுவதால், எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் உலக நாடுகளும் இலங்கையும் கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்டுவிடும் அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண நம்பிக்கை தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (8) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசி குறித்து, இலங்கை அரசாங்கம் என்ன வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

கொரோனா தடுப்பூசியை பாதுகாத்தல் மற்றும் தொற்றாளர்கள் பயன்படுத்தும் விதம் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அனைத்து நாடுகளுக்கும் சமனாக விநியோகிக்கும் முறையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதில் இலங்கைக்கும் ஒரு தொகுதியைப் பெற்றுத்தருமாறு உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது என்றார். 

எதிர்வரும் நாள்களில் அந்த தடுப்பூசியை இலங்கை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்கும் என்றார். இலங்கையின் தேசிய ஆயுர்வேத உற்பத்தியாக வழங்கப்பட்டுள்ள மருந்து தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவருவதாகவும் இது தொடர்பிலும் அரசாங்கம் ஆராய்ந்து பார்க்குமென்றும் தெரிவித்தார்.

 இதுதொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேற்கத்தேய மருத்துவ முறைபடி ஆராய்ந்த பின்னரே அந்த மருந்து தொடர்பில் உறுதியான முடிவை வெளியிட முடியும். நாட்டின் தற்போதைய நிலையில், அந்த மருந்துக்கு சிறந்த பதிலொன்று கிடைக்குமாயின் குறுகிய கால தீர்வாக ஆயுர்வேத மருந்தை வழங்க வைத்தியர்களும் இணக்கம் தெரிவித்திருப்பதால், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .