2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கோமாளிகளின் புதிய அரங்கேற்றம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

" சிங்கள - பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக  சூறையாடி , ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அன்று இனவாதம் கக்கி தம்மை தேசப்பற்றாளர்களாக அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்,  இன்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக நாடகங்களை அரங்கேற்றும் கோமாளிகளாக வலம்வருகின்றனர் என  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அந்த கோமாளிகளின் புதிய அரங்கேற்றமே கெரவலப்பிட்டிய மின்திட்ட கூத்தாகும்“ என்றார்.

" நாட்டிலுள்ள ஒரு பிடி மண்ணையேனும் வெளிநாட்டுக்கு தாரை வார்க்க மாட்டோம் எனவும், விற்கப்பட்டுள்ள தேசிய வளங்கள் மீள பெறப்படும் எனவும் ராஜபக்‌ஷர்களும், அவர்களின் சகாக்களும் தேர்தல் காலங்களில் சூளுரைத்தனர். மறுபுறத்தில் விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பங்காளிகளை களமிறக்கி சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் இனவாதம் விதைக்கப்பட்டது. இதற்கு சிங்கள தேசியவாத அமைப்புகளும் துணைநின்றன எற்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தேசிய வளங்கள் விற்கப்பட்டுவருகின்றன. மேலும் பல இடங்கள் விற்கப்படவுள்ளன. வெளிநாட்டு முதலீடு என்ற போர்வையிலேயே இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றன. இவை தொடர்பான தகவல்களை நாம் அம்பலப்படுத்துவதால் மக்கள் தெளிவுபெற்று வருகின்றனர்.  அதேபோல உண்மையான தேசப்பற்றுள்ள சில தேசியவாத அமைப்புகளும் தகவல்களை பகிரங்கப்படுத்திவருகின்றன. இதனால் அரசாங்க எதிர்ப்பு அலை உருவாகிவருகின்றது.

இந்நிலையில் மக்களை திசைதிருப்பி அரசை பாதுகாத்துக்கொள்வதற்காக பங்காளிக்கட்சிகள் வழமையான பாணியில் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

20 ஆவது திருத்தச்சட்டம்வந்தபோது, இரட்டைக்குடியுரிமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இறுதியில் சரணடைந்து சம்மதம் தெரிவித்தனர். கொழும்பு துறைமுக விவகாரத்திலும் இது நடந்தது. அடுத்ததாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் எதிர்ப்பை வெளியிட்டனர். ஆனால் மேற்கு முனையம் வழங்கப்பட்டுவிட்டது.  

தற்போது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தின் நிலையத்தின் 40 சதவீதமான பங்குகள் அமெரிக்கா நிறுவனத்தின் வசம் செல்லவுள்ளன. உடன்படிக்கை கைச்சாத்திடும்வரை 'கப்சிப்' என இருந்துவிட்டு, இன்று வீராப்பு பேசுகின்றனர். தேசப்பற்றாளர்கள்போல் தம்மை காண்பித்துக்கொள்வதற்காக கோமாளி கூத்தாடுகின்றனர். இவர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X