2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

சி.பி.ஐ. முன்பு ஆஜராவதற்கு அவகாசம் கேட்கிறார் விஜய்

Freelancer   / 2026 மார்ச் 10 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டில்லியில் சி.பி.ஐ. முன்பு ஆஜராவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் 15 நாள்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்.

கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்த வழக்கு விவகாரம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பி உள்ளது.

ஆனால், தேர்தல் பணி காரணமாக 15 நாள்கள் அவகாசம் கேட்டு சி.பி.ஐக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்ரெப்பர் .27 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக, டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே ஆஜரான த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூர் ஆட்சியர், எஸ்.பி.யிடமும் விசாரணை நடந்தது.

இதற்கிடையே, விஜய் பிரச்சார பஸ் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கண்காணிப்பு கமராக்கள் மற்றும் அதில் பதிவான காட்சிகள் குறித்து பஸ் சாரதி பரணிதரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு கடந்த ஜனவரி 6 ஆம் திகதி சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பியது. அதன்பேரில், ஜனவரி 12 ஆம் திகதி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பி ஜனவரி 19 ஆம் திகதி 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போதே, குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படலாம் என்றும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அதேநேரம், 2 ஆவது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் இன்று மீண்டும் டில்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. அலுவலக வட்டாரங்களில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணையில் மேலும் சில விவரங்கள் கிடைத்துள்ளன. அதுதொடர்பாக விஜய்யிடம் விசாரித்து, தெளிவுபெற வேண்டிஉள்ளது. அதற்காக அவர் மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை சுட்டிக்காட்டி நேரில் ஆஜராக தனக்கு 15 நாள் விலக்கு அளிக்கவேண்டும், சென்னையிலேயே ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் சி.பி.ஐக்கு விஜய் கடிதம் எழுதி உள்ளார் என  தகவல் வெளியாகி உள்ளது.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .