2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தென் கடலில் மீன் பிடிக்கவும் விமானங்கள் பறக்கவும் தடை?

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென் கடற்பகுதியில் எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மீன்பிடிப்பதற்கும் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், எதிர்வரும் 13ஆம் திகதியன்று தென்கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டு, எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, அன்றைய தினத்தன்று மேற்குறிப்பிட்ட இரண்டு செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  

விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 2 மீற்றர் நீளமானWT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், குறித்த தினத்தன்று இலங்கைக்குத் தெற்கில், 100 கிலோமீற்றர் தொலைவில், கடலில் விழும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நேரப்படி, அன்றையதினம் காலை 11.48க்கு தென்கடலிலேயே விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மர்மப் பொருளினால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படாது என்றும், அது வளிமண்டலத்துக்குள் நுழையும் போது பெரும்பாலும் நடுவானிலேயே எரிந்து போய் விடும் சாத்தியம் உள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி சந்தன ஜெயரத்ன, ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

அதேவேளை, சிறிய துண்டுகள் நிலத்தில் விழுவதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது என்று, ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் மூத்த ஆய்வாளரான விஞ்ஞானி சரோஜ் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

எல்லாப் பகுதிகளும் எரிந்து போகத் தவறினால், சிறிய துண்டுகள் நிலத்தை வந்தடைய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆர்தர் சி கிளார்க் நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் தகவல்களின் அடிப்படையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை, தென் கடல் பகுதியில் விமானப் பறப்புக்குத் தடைவிதிப்பது குறித்து அவதானித்து வருவதாக, விமான சேவைகள் கட்டுப்பாட்டாளர் கிரிசாந்தி திசேரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை, அந்தப் பகுதிகளில் மீன்பிடித் தடையை நடைமுறைப்படுத்தும் படி அறிவுறுத்தியுள்ளதாக, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் பெர்ணான்டோ கூறியுள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X