2026 மே 14, வியாழக்கிழமை

‘தடுப்பூசி கிடைக்காதென அச்சம் கொள்ளாதீர்கள்’

Niroshini   / 2021 மே 28 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சேன்​ செனவிரத்ன

கொரோனா தடுப்பூசி செயற்றிட்டத்தை இலங்கையிலுள்ள சகல கிராமங்களுக்கும் கொண்டு செல்வதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, எனவே தமக்கு தடுப்பூசி கிடைக்காதென எவரும் வீண் அச்சத்தை ஏற்படுத்திகொள்ள வேண்டாம் என்றார்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (26)  நடைபெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், தற்போது சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், தமக்கான சந்தர்ப்பம் வரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். இல்லையாயின் வைத்தியர்களால் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போகும் என்றார்.

கொவிட் குழு மற்றும் வைத்தியர்கள் இணைந்து தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக 5 மில்லியன் தடுப்பூசிகள் கிடைத்துள்ளது எனத் தெரிவித்த அவர், கண்டி மாவட்டத்தில் இந்த வார இறுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றார்.

எனவே, தடுப்பூசி யாருக்கு, எங்கே என்பதை தீர்மானிப்பவர்கள் வைத்தியர்கள் என்றும் நாம் அதற்கு தேவையான பின்னணியை உருவாக்குதல் மற்றும் அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகும். இந்த நடவடிக்கை தனது அமைச்சுக்குரியது அல்ல என்றாலும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கவே கண்டிக்கு வருகைத் தந்ததாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இதன்போது கிரிக்கெட் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், எமது கிரிக்கெட் மைதானங்களுக்கு புதிய வீரர்கள் பலரை களமிறக்கியுள்ளோம். போட்டியில் தோல்வியடைகின்றமை தொடர்பில் எமக்கு வேதனையுள்ளது. எனினும் அவர்களுக்கும் ஒரு காலத்தை வழங்க வேண்டும். அதேப்போல் வீரர்களும் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பிரயோசனப்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .