2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்:அறிக்கையின் பிரகாரமே நடவடிக்கை

Kogilavani   / 2016 மார்ச் 04 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அரசியல்  கைதிகள் குறித்து சட்டமா அதிபரின் அறிக்கையினை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், குறித்த அறிக்கையின் பிரகாரமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும், மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.  

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அவரை, அவரது அமைச்சில் வைத்து புதன்கிழமை மாலை, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவாரத்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக, செல்வம் அடக்கலநாதன் எம்.பி தெரிவித்தார்.

குறித்த சந்திப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் அரசியல் கைதிகள், தொடர்ச்சியாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் நிலைமை குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினேன்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து, பல்வேறு விடயங்களை அமைச்சரிடம் இதன் போது தெளிவுபடுத்தினேன்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது எனவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.

இந்த விவகாரம் தொடர்பில், சட்டமா அதிபரின் அறிக்கையைத் தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், குறித்த அரசியல் கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் மேற்கொள்ளுவதாகவும், ஆனால், அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சம்மதிப்பார்களா எனத் தெரியாது என்றும் கூறினார்.

புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சிலர் சம்மதிக்கின்றனர், சிலர் மறுப்புத் தெரிவிக்கின்றார்கள் எனவும், அவ்விடயம் தமக்கு பிரச்சினையாக இருக்கின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சகல அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வு வழங்கப்படும் என ஒருமித்த முடிவை எடுத்து, அதனை அரசியல் கைதிகளிடம் தெரிவிக்கின்ற போது, அதற்கு அவர்கள் சம்மதிக்க முடியும் என நான், அமைச்சரிடம் தெரிவித்தேன்.

அதனை விடுத்து, அவர்களுக்கு உரிய பதில் எதனையும் கூறாது விட்டால், அவர்கள் இப்படிப்பட்ட முடிவுகளையே எடுக்க வேண்டியுள்ளது எனவும், தமிழ் அரசியல் கைதிகள் இன்றுடன் 9ஆவது நாளாக, தமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, அவர்களின் விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கோரியுள்ளேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .